நாடளாவிய ரீதியில் மக்கள் வீதிகளில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பில் 'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டங்கள் மீது நேற்றையதினம் பொதுஜனபெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். இதில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இவ்வாறு கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதியான மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தாக்குதலை மேற்கொண்ட நிலையில், நாடளாவிய ரீதியில் வன்முறைகள் தோற்றம் பெற்றது.
இதையடுத்து மக்கள் பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களை தாக்கி அழித்ததுடன் அவற்றுக்கு தீ வைத்து அழித்தனர்.
இந்நிலையில் குறித்த அரசியல்வாதிகளில் எவராவது நாட்டை விட்டு தப்பிச் சென்று விடாமல் தடுக்க பொதுமக்கள் வீதிகளில் இறங்கி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேக வீதி மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்லும் வீதிகள் போன்றவற்றில் மக்கள் இவ்வாறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜபக்ச குடும்பம் தப்பியோடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் பரவி வரும் நிலையில் விமான நிலையங்கள் மக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment