(எம்.ஆர்.எம்.வசீம்)
கொழும்பு மாநகர சபை மாநகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்க விடுமுறையில் செல்வதாக எனக்கு அறிவித்திருக்கின்றார். அதனால் புதிய ஆணையாளர் ஒருவரை நியமிக்கும்வரை பிரதி ஆணையாளர் யோகராணி சில்வெஸ்டரை பதில் ஆணையாளராக நியமிக்குமாறு மேல் மாகாண ஆளுநரை கேட்டுக் கொள்கின்றேன் என கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனாநாயக்க மாநகர சபையில் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிரான ஐக்கிய தேசிய கட்சி கொண்டுவந்த அதிருப்தி பிரேரணை நேற்று கொழும்பு மாநகர சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை செவிமடுத்து, பதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மாநகர ஆணையாளர் பல தடவைகள் மாநகர சட்டத்துக்கு முரணாக செற்பட்டு வந்திருந்தார். இது தொடர்பாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது, அவரின் நடவடிக்கைக்கு எதிராக மாநகர சபைக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் முறையிட்டு கேட்டபோது, மாநகர ஆணையாளரின் நடவடிக்கை சட்டத்துக்கு முரண் என அவர் எம்மிடம் தெரிவித்திருந்தார்.
மாநகர ஆணையாளர் சட்டத்தரணியாக இருந்தும் மாநகர சபை நடவடிக்கைகளில் சட்டத்தை மீறியே செயற்பட்டுள்ளார். அவரின் நடவடிக்கைகளால் மாநகர மக்களுக்கு மேற்கொள்ள இருந்த பல வேலைத்திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டன. இது தொடர்பாக மேல் மாகாண ஆளுநருக்கும் முறையிட்டிருந்தோம் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது இவ்வாறு இருக்க ஜூன் முதலாம் திகதியில் இருந்து ஒன்றரை வருடம் விடுமுறையில் செல்வதாக ஆணையாளர் எனக்கு கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பி இருந்தார். அவர் ஆரம்பமாக விடுமுறை தொடர்பாக மாநகர மேயர் என்ற வகையில் என்னிடமே கேட்டிருக்க வேண்டும். ஆனால் அனுபமுள்ள நிர்வாக அதிகாரியான அவர், எந்த அடிப்படையில் விடுமுறை பெற்றுக் கொண்டார் என எனக்கு தெரியாது.
என்றாலும் ஆணையாளர் விடுமுறையில் செல்வதால், மேல் மாகாண ஆளுநர் புதிய ஆணையாளர் ஒருவரை நியமிக்கும் வரை, மாநகர பிரதி ஆணையாளராக இருந்து வரும் யோகராணி சில்வெஸ்டரை பதில் ஆணையாளராக நியமிக்குமாறு ஆளுநரை கேட்டுக் கொள்வதாக இந்த சபைக்கு அறிவிக்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment