ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு : தமக்கு இன்னும் மக்களாணை உள்ளதாக குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது - புகையிரத சேவை ஒன்றிணைந்த சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 4, 2022

ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு : தமக்கு இன்னும் மக்களாணை உள்ளதாக குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது - புகையிரத சேவை ஒன்றிணைந்த சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி உட்பட பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (6) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் வியாழக்கிழமை (5) நள்ளிரவு முதல் 30 புகையிரத தொழிற்சங்கத்தினரை ஒன்றினைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. புகையிரத சேவையினை பயன்படுத்தும் பொதுப் பயணிகள் மாற்று போக்கு வரத்து சேவையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என புகையிரத சேவை ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் எஸ்.கே.விதானகே தெரிவித்தார்.

புகையிரத தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு அரசாங்கத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் பல்வேறு வழிமுறைகளில் போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள். தமக்கு இன்னும் மக்களாணை உள்ளதாக ஜனாதிபதி உட்பட பிரதமர் குறிப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவுள்ளது.

ஜனாதிபதி உட்பட பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 28ஆம் திகதி நாடு தழுவிய ரிதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெற்றி பெற்றது.

அரசாங்கத்திற்கு ஒரு வாரம் காலவகாசம் வழங்கினோம். இருப்பினும் ஜனாதிபதி உட்பட பிரதமர் மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

ஜனாதிபதி உட்பட பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் 30 புகையிரத தொழிற்சங்கத்தினரை ஒன்றினைத்து இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.பணிப்புறக்கணிப்பினால் புகையிரத சேவை இடம்பெறாது.

அரசியல் தேவைக்காகவும், தொழில் உரிமைகளுக்காகவும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவில்லை. முழு அரசியல் கட்டமைப்பிற்கும் எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் காலி முகத்திடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போது அவர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு.

பொருளாதார நெருக்கடி அனைத்து தரப்பினருக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட வேண்டு ம் என்றார்.

No comments:

Post a Comment