வரி வீதத்தை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது இலங்கை பிரதமர் அலுவலகம் - காரணம் என்ன? - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 31, 2022

வரி வீதத்தை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது இலங்கை பிரதமர் அலுவலகம் - காரணம் என்ன?

இலங்கையில் 8 சதவீதமாக காணப்பட்ட மதிப்பு கூட்டு வரியை (வட்) 12 சதவீதம் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 11.25 சதவீதமாக காணப்பட்ட தொலைத் தொடர்பு வரியை 15 சதவீதம் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை பிரதமர் அலுவலகம் இன்று, மே 31 வெளியிட்டது.

பிரதமர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், அந்த அறிக்கையில், "2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை குறைந்த வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தியது. இந்தச் சீர்திருத்தங்களில் மதிப்பு கூட்டு வரி (VAT), தனிப்பட்ட வருமான வரி (PIT) மற்றும் பெரு நிறுவன வருமான வரி (CIT) ஆகியவற்றின் வரி விகிதங்களைக் குறைத்தல் மற்றும் மதிப்பு கூட்டு வரி மற்றும் தனிப்பட்ட வருமான வரி ஆகியவற்றின் வரித் தளங்களைக் குறைத்தல் ஆகியவை அடங்கும்.

விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான வரி விலக்குகள் (IT) மற்றும் செயல்படுத்தப்பட்ட சேவைகள், வரி விலக்குகள் மற்றும் வரி விடுமுறைகள் போன்ற ஏராளமான வரிச் சலுகைகளை அறிமுகப்படுத்தும் போது இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 600 கோடி ரூபாய் - 800 பில்லியன் வரி வருவாய் திறைசேரிக்கு (அரசு கருவூலம்) நட்டம் ஏற்பட்டது.

எனவே, இந்தச் சீர்திருத்தங்கள், 2020 - 2021 இல் பரவிய கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் தொடர்புடைய வளர்ச்சிகள் காரணமாக, அரசாங்க வருவாயில் குறிப்பிடத்தக்க இழப்புக்கு வழிவகுத்த கொள்கைகளாகக் கருதப்படுகின்றன.

மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கான வருவாய் 2019 இல் 12.7 சதவீதத்திலிருந்து 2020 இல் 9.1 சதவீதமாகக் குறைந்துள்ளது, மேலும் 2021 இல் 8.7 சதவீதமாக மோசமடைந்துள்ளது. இது வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வருவாய் விகிதமான 25 சதவீதத்தை விட கணிசமான குறைவாகும்.

குறைந்த வரி விதிப்பு, வருவாய் திரட்டலில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம், தொற்று நோய் நிவாரண நடவடிக்கைகளுடன், வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை 2020 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.1 சதவீதமாகவும், 2021 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.2 சதவீதமாகவும் 2019 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.6 சதவீதத்திலிருந்து கணிசமாக விரிவுபடுத்தியது.

இது 2019 இல் 86.9 சதவீதமாக இருந்த அரசாங்கக் கடனை 2020 இல் 100.6 சதவீதமாகவும், 2021 இல் 104.6 சதவீதமாகவும் ஜிடிபி விகிதத்தில் அதிகரிக்க வழிவகுத்தது.

ஏன் இந்த அறிவிப்பு?
இந்த நிதி ஏற்றத்தாழ்வு பொருளாதாரத்தின் மீது குறிப்பிடத்தக்க பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இலங்கையின் பொருளாதாரக் கண்ணோட்டம் முன்னோடியில்லாத பண வீக்க அழுத்தங்கள், தொடர்ந்து பெரிய நிதி மற்றும் இருப்பு நிதி தேவைகள், பெரிய கடன் அதிகரிப்பு மற்றும் முக்கியமான குறைந்த அளவிலான இருப்புக்கள் மற்றும் மாற்று விகிதத்தில் அழுத்தங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது.

அந்நியச் செலாவணி தட்டுப்பாடு மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைகள் மற்றும் கடன் மதிப்பீடு குறைவதால் வணிகம் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை இழப்பு ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி மோசமாகப் பாதிக்கப்படும்.

சர்வதேச சந்தைகளுக்கான அணுகல் இழப்பு மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு மற்ற அந்நிய செலாவணி அரசாங்கத்திற்கு கிடைக்கின்றமை என்பன அரசாங்க வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைக்கு நிதியளிப்பதில் கணிசமான சிக்கல்களை உருவாக்கியுள்ளன.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், வெளிநாட்டு மூலங்களுக்கு நிகர திருப்பிச் செலுத்தலால், முழு வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையும் உள்நாட்டு ஆதாரங்கள் மூலம் நிதியளிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்கான உள்நாட்டு ஆதாரங்களில், பெரும்பான்மையானது வங்கி மூலங்களிலிருந்து, குறிப்பாக இலங்கை மத்திய வங்கியிடமிருந்து பெறப்பட்டது.

உள்நாட்டு வங்கி அல்லாத ஆதாரங்களில் போதுமான அளவு நிகர நிதி கிடைக்காததால் மத்திய வங்கியின் தொடர்ச்சியான கணிசமான அளவு நிதியளிப்பு பொருளாதாரத்தை மோசமாக பாதித்துள்ளது.

தற்போது, வட்டி, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொப்பனவுகள் போன்றவற்றின் கணிசமான பகுதி உட்பட அரசாங்கத்தின் செலவினங்களைச் செய்வதற்கு பொது திறைசேரி மத்திய வங்கியின் நிதியுதவியை பெற வேண்டிய நெருக்கடியான நிலைக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

எனவே, வருவாயை மேம்படுத்துதல் மற்றும் 2022 மற்றும் அதற்கு அப்பால் நாட்டின் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி நோக்கங்களை ஆதரிக்கும் வகையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக செலவினங்களை குறைக்க வலுவான நிதி ஒருங்கிணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது அவசியம்" என பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment