'சிங்கங்கள் இருக்குமிடங்களில் கர்ஜனைகள் இயல்பானதே” - எனக்கும், பொன்சேக்காவுக்கும் இடையிலான வாய்த்தர்க்கத்தை பெரிதாக்க வேண்டாம் - ஹரீன் - News View

About Us

About Us

Breaking

Monday, May 2, 2022

'சிங்கங்கள் இருக்குமிடங்களில் கர்ஜனைகள் இயல்பானதே” - எனக்கும், பொன்சேக்காவுக்கும் இடையிலான வாய்த்தர்க்கத்தை பெரிதாக்க வேண்டாம் - ஹரீன்

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தின் போது உரையாற்றும் பெயர்ப் பட்டியலில் தனக்கு உரிய இடம் வழங்கப்படாமை குறித்து கட்சித் தலைவரிடம் முறைப்பாடளிக்கவுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

எனினும் தனக்கும் சரத் பொன்சேக்காவிற்குமிடையிலான வாய்த்தர்க்கத்தை பாரியதொரு முரண்பாடாகக் காண்பிக்க வேண்டாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (1) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் சரத் பொன்சேக்கா மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்படுத்தற் பிரதானியான ஹரீன் பெர்னாண்டோவினாலேயே அனைத்து நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கூட்டத்தில் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தனாயக்க உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, சரத் பொன்சேக்கா ஹரினை அழைத்து அவரது கைகளிலிருந்த பெயர்ப் பட்டியலைப் பார்வையிட்டார்.

கட்சியின் பதவி நிலை அடிப்படையில் தனக்கே முதலில் உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சரத் பொன்சேக்கா ஹரினிடம் கோபமாகக் கூறியதாகவும், அதற்கு ஹரினும் கோபமாகவே பதிலளித்தாகவும் கூறப்படுகிறது.

இதன்போது இருவருக்குமிடையிலான வாய்த்தர்க்கம் தீவிரமடைய, அருகிலிருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரே அவர்களை சமாதானப்படுத்தினர்.

நிகழ்வின் நிறைவில் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருவரையும் அழைத்து சமாதானப்படுத்தியதாகவும் தெரியவருகிறது.

எவ்வாறிருப்பினும், கட்சியின் தவிசாளர் என்ற ரீதியில் இரண்டாம் நிலை பதவியை வகிக்கும் தனக்கு உரையாற்றும் பட்டியலில் உரிய இடம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்தார்.

இது குறித்து கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் முறைப்பாடளிக்கவுள்ளதாகவும், அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேக்கா மேலும் தெரிவித்தார்.

இது குறித்து இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஹரின் பெர்னாண்டோ, 'சிங்கங்கள் இருக்குமிடங்களில் இவ்வாறாக கர்ஜனைகள் இயல்பானதே. இதன்போது நரி ஊளையிட்டால் அதனை பெரிதாகக் கருதக் கூடாது. நான் கூறுவது சில நரி ஊடகங்கள் அவற்றில் இன்பம் காண்கின்றன என்பதையே' என்றார்.

No comments:

Post a Comment