பிரதமர் பதவியை ஏற்க தயார் என்கிறார் கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Monday, May 9, 2022

பிரதமர் பதவியை ஏற்க தயார் என்கிறார் கரு ஜயசூரிய

(நா.தனுஜா)

அனைத்து அரசியல் கட்சிகளும் இணங்கும் பட்சத்தில் உரியவாறான செயற்திட்டத்துடன் குறுகிய காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டு நாட்டிற்கு சேவையாற்றத் தயாராக இருப்பதாக முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டு மொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை நேற்று திங்கட்கிழமை மகிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இடைக்கால அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படும் பட்சத்தில் அதன் பிரதமராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவைப் பரிந்துரைப்பதாக சில அரசியல் கட்சிகள் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு கரு ஜயசூரிய தயாராக இருக்கின்றாரா என்று அவர் தலைவராக இருக்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பிரசாரச் செயலாளர் சுனில் ஜயசேகரவிடம் வினவியபோது அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அரச அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற விருப்பம் கரு ஜயசூரியவிற்கு இல்லை என்று தெரிவித்த அவர், இருப்பினும் தற்போது நாடு மிகுந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் நாட்டிற்கு நன்மையளிக்கக்கூடிய எதேனுமொன்றைச் செய்ய வேண்டுமென அவர் விரும்புகின்றார் என்றும் குறிப்பிட்டார்.

அந்த வகையில் அனைத்துக் கட்சிகளும் இணங்கும் பட்சத்தில் 18 மாதங்கள் என்ற குறுங்காலத்திற்கு பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டு நாட்டிற்கு சேவையாற்றுவதற்குத் தயாராக இருப்பதாக கரு ஜயசூரிய அறிவித்திருப்பதாகவும் சுனில் ஜயசேகர தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு பதவியேற்கும் பட்சத்தில் தற்போதைய நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கத்தக்கவாறான செயற்திட்டத்தை உருவாக்குவதற்கு அவர் தயாராக இருக்கின்றார் என்றும் சுனில் ஜயசேகர சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment