(இராஜதுரை ஹஷான்)
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் ஜனநாயகமானது, அமைதியானது என நீதிமன்றம் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளது. எக்காரணத்திற்காக அவரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதி நாட்டு மக்கள் அறிவிக்க வேண்டும். மக்களுக்கு எதிரான அடக்குமுறையை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும் இல்லாவிடின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். சர்வாதிகார ஆட்சியாளர்களின் இறுதி நிலைமை என்னவாயிற்று என்பதை ஜனாதிபதி மீட்டுப்பார்க்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபபடுகிறார்கள்.
ஜனாதிபதி தனது பதவியை பாதுகாத்துக் கொண்டு பிரதமர் உட்பட அமைச்சரவையை பதவி விலக்கத் தீர்மானித்துள்ளார்.
நாட்டு மக்கள் தன்னை பதவி விலகுமாறு தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் வலியுறுத்தி வருவதை ஜனாதிபதி அறியாமல் இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் ஜனநாயகமானது, அமைதியானது என நீதிமன்றம் பலமுறை அறிவித்துள்ள நிலையில் மக்களின் ஜனநாயக போராட்டத்தை முடக்க அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகிறது.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ வியாழக்கிழமை (5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 2 ஆம் திகதி எவ்வித காரணமுமின்றி அவசரகாலச் சட்டமும், 3ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டது.
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு அச்சமடைந்து ஜனாதிபதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியதை நாட்டு மக்கள் மதிக்கவில்லை.
அவசரகாலச் சட்டம் ஏன் அமுல்படுத்தப்படும் என்பது குறித்து ஜனாதிபதி முதலில் தெரிந்தவர்களிடம் கேட்டு விளங்கிக் கொள்ள வேண்டும்.
எக்காரணத்திற்காக அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
ஜனாதிபதி இராணுவத்தினரது பாதுகாப்புடன் பதுங்கு குழியில் ஒலிந்து கொண்டு மக்களின் ஜனநாயக போராட்டத்தை முடக்க முயற்சித்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
சர்வாதிகார ஆட்சியாளர்களின் இறுதி நிலைமை என்னவாயிற்று என்பதை ஜனாதிபதி மீட்டிப்பார்க்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment