இனவாத அரசியலுக்கு எதிராகக் குரல் கொடுக்க மக்கள் துணிந்து விட்டார்கள், காலி முகத்திடல் போராட்டம் இதனையே பறை சாட்டிக் கொண்டிருக்கிறது - பைஸர் முஸ்தபா - News View

About Us

About Us

Breaking

Sunday, May 1, 2022

இனவாத அரசியலுக்கு எதிராகக் குரல் கொடுக்க மக்கள் துணிந்து விட்டார்கள், காலி முகத்திடல் போராட்டம் இதனையே பறை சாட்டிக் கொண்டிருக்கிறது - பைஸர் முஸ்தபா

இந்நாட்டில் இனவாத அரசியலுக்கு எதிராகக் குரல் கொடுக்க மக்கள் துணிந்து விட்டார்கள். காலி முகத்திடலில் இடம்பெறும் மக்கள் போராட்டம் இதனையே எங்களுக்கு பறை சாட்டிக் கொண்டிருக்கிறது. இதனை ஒவ்வொரு அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

"மக்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும் அரசுக்கு எதிரான கொழும்பு மாவட்ட தொழிலாளர் போராட்டம்" எனும் தலைப்பில், கொழும்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதான காரியாலயத்தில் இன்று (01) இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, இன்றைய அரசாங்கம் மக்களுக்கு சொல்லொன்னாத கஷ்டங்களையும் துயரங்களையும் கொடுத்துக் கொண்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

எரிவாயு, எரிபொருள் என்பன வானளவில் உயர்ந்துள்ளன. மக்கள் தமது அன்றாட உணவுத் தேவைகளைக் கூட சரியான முறையில் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அன்று பொருட்களை வாங்கத்தான் கியூவில் நின்றார்கள். இன்று கேஸ், பெற்றோலுக்காக கியூவில் நிற்கின்றார்கள்.

இனவாதம் அன்று தலை விரித்து ஆடியது. ஆனால், இன்று அந்த இனவாத நடவடிக்கைகளுக்கு காலி முகத்திடலில் முற்றுப் புள்ளி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இன்று மூடர்கள் அல்லர். அவர்கள் இன்றைய அரசுக்கு தகுந்த பாடங்களைக் கற்றுக் கொடுக்க கங்கனம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் அபிலாஷைகள், ஆர்வங்கள், எதிர்பார்ப்புக்கள், எல்லாம் இன்று தவிடுபொடியாகியுள்ளன. அவர்கள் இன்று ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். இதனாலேயே வீதியில் இறங்கிக் கூட போராடும் அளவுக்கு அவர்கள் துணிந்து விட்டார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரே கொள்கையின் கீழ் கொள்கை எதுவும் மாறாமல் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கட்சியாகும். மக்களின் துன்ப துயரங்களை அறிந்து செயற்படும் கட்சியாகும். இக்கட்சி மக்களுடனேயே இருந்து மக்களை அரவணைத்துச் செல்லும் கட்சியாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இன்று சிலர் நாசமாக்க நினைக்கிறார்கள். ஆனால், கட்சியின் வெற்றிக்கு இன்றும் கூட பலர் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எமது கட்சிக்கு கொழும்புக்கு வெளியேயும் நிறைய உறுப்பினர்களும், அபிமானிகளும் இருக்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நிறையவே உறுப்பினர்கள் உள்ளனர் என்பதையும் இவ்விடத்தில் பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். அன்று உள்ள மக்களே இன்றும் எம்முடன் சிநேகிதமாகவும் தோழோடு தோழாகவும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர் என்றார்.

(ஐ. ஏ. காதிர் கான்)

No comments:

Post a Comment