(இராஜதுரை ஹஷான்)
சிறுபோக விவசாயத்தில் 50 சதவீத விளைச்சலை பெற்றுக் கொள்வது கூட சாத்தியமற்றது. ஏனெனில் ஒரு மெற்றிக் தொன் உரம் கூட இதுவரையில் இறக்குமதி செய்யப்படவில்லை. எதிர்வரும் காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரிடும். நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட வேண்டும். வசதியில்லாதவர்கள் பூச்சாடிகளிலாவது மரகறிகளை பயிரிட வேண்டும் என விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விவசாயத்துறை பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. சிறுபோக விவசாயத்தில் 50 சதவீத விளைச்சல் கிடைப்பதும் சந்தேகத்திற்குரியது.
65 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றவுடன் அதனை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கலாம் என எதிர்பார்த்தேன். இருப்பினும் உண்மையை குறிப்பிட வேண்டும் ஒரு மெற்றிக் தொன் உரம் கூட இறக்குமதி செய்யவில்லை, கப்பலுக்கு ஏற்றவுமில்லை.
உலக உணவு தட்டுப்பாடு தொடர்பில் சகல துறைகளும் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளன. காசுக்கு கூட பிற நாடுகள் உரத்தை விநியோகிக்காது. ஆகவே சிறுபோக விவசாயத்தில் கடினமாக செயற்பட்டு விளைச்சலை பெற்றுக் கொள்வது சாத்தியமற்றது. ஆகவே பெரும்போக விவசாயத்திலாவது சிறந்த விளைச்சலை பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பிரதமர் ரணில் அல்ல எவர் ஆட்சியில் இருந்தாலும் எதிர்வரும் 3 மாத காலத்திற்குள் முழு நாடும் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். சம்பளம் ஒருபோதும் அதிகரிக்கப்படமாட்டாது. நாணயம் அச்சிடுவதற்கான தாள்களை இறக்குமதி செய்யக்கூட டொலர் பற்றாக்குறை காணப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் நெல்லுக்கான விலை சடுதியாக அதிகரிக்கக்கூடும். ஆகவே அரிசியின் விலையும் அதற்கேற்ப அதிகரிக்கக்கூடும். உணவுத் தட்டுப்பாடு சவாலை எதிர்கொள்ள நாட்டு மக்கள் தயாராக வேண்டும்.
வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையில் அனைவரும் ஈடுபட வேண்டும். வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியாதவர்கள் பூச்சாடிகளிலாவது மரகறிகளை பயிரிட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment