(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் இன்னும் ஆளும் தரப்பினர் வசமே உள்ளது. ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமாயின் எதிர்த்தரப்பினர் அரசியமைப்பிற்குட்பட்ட வகையில் அடுத்தக்கட்ட நகர்வுகளை முன்னெடுக்கலாம். அரசியமைப்பிற்கு அப்பாற்பட்டு செயற்பட்டால் அது மாறுப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை (5) ஆரம்பமானதை தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பட்டார்.
ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறி செயற்படவில்லை. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அவர் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் மறுக்கவில்லை. யோசனைகள் இருப்பினும் தாராளமாக முன்வைக்கலாம். அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையில் சபாநாயர் உட்பட எவருக்கும் செயற்பட முடியாது.
பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் இன்னும் ஆளுங்கட்சி வசம்தான் உள்ளது. பெரும்பான்மை பலம் நீக்கப்பட்டுள்ளது என எதிர்த்தரப்பினர் கருதுவார்களாயின் அடுத்தகட்ட நகர்வினை முன்னெடுக்கலாம்.
ஒன்று பாராளுமன்றில் தீர்மானமொன்றை நிறைவேற்றி பொதுத் தேர்தலுக்கு செல்லலாம். அல்லது எதிரணியினர் பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றில் உறுதிப்படுத்தி அரசாங்கத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம் இதுவே அரசியலமைப்பு ரீதியிலான இரு தீர்மானங்களாகும். இதற்கு அப்பாற்பட்டு எதனையும் செயற்படுத்த முடியாது.
பாராளுமன்ற செயற்பாடுகள் அரசியலமைப்பிற்கு அமைய முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி நான்கு அமைச்சுக்களை தற்காலிகமாக நியமித்துள்ளார். பாராளுமன்றத்தின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட முடியாது.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை அரசாங்கம் ஒருபோதும் மறுக்கவில்லை. நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி ஆரம்பத்திலிருந்து அதிக கவனம் செலுத்தியுள்ளார். அனைத்து கட்சிகளின் யோசனைகளையும் ஒருமுகப்படுத்தி சிறந்த தீர்மானத்தை செயற்படுத்த ஜனாதிபதி சர்வ கட்சி மாநாட்டை நடத்தினார்.
பிரச்சிளைகளுக்கு தீர்வு காணும் யோசனைகளை ஜனாதிபதியிடம் தாராளமாக முன்வைக்கலாம். தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். தற்போதைய சூழலில் அரசியல் இலாபம் தேடிக் கொள்ளும் வகையில் பிரச்சினைகளை தீவிரப்படுத்துவது பொருத்தமற்றதாகும் என்றார்.
No comments:
Post a Comment