(எம்.எப்.எம்.பஸீர்)
அத்தியவசியமான பொருட்களாக கருதப்படும் உணவு, சமையல் எரிவாயு, பால் மா, மின்சாரம், மருந்துகள் போன்றவற்றை பெற்றுக் கொள்ள நாடளாவிய ரீதியில் காணப்படும் சிரமத்தால், ஜனாதிபதியின் மிரிஹானை இல்லத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை, அது சார்ந்த சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பலர், மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இதற்கான உத்தர்வை நேற்று (5) நுகேகொட வலயத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சருக்கு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2 ஆம் திகதி, இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைக்கான உத்தரவு நேற்று பொலிஸ்மா அதிபரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தது.
மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட நபர்கள் தாக்கப்பட்டமை, அமைதி ஆர்ப்பாட்டத்தை குழப்பும் வகையில் தாக்குதல் நடாத்திய பொலிஸ் மற்றும் இராணுவத்தினர், தக்குதலுக்கு உத்தரவிட்ட உயரதிகாரிகள், தாக்குதல்களை மேற்பார்வை செய்த அதிகாரிகள், பஸ் வண்டிக்கு தீ மூட்ட இடமளித்து பார்த்துக் கொண்டிருந்த பொலிஸ், இராணுவ மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடளித்தது.
இது தொடர்பிலேயே ஆராய்ந்து, குறித்த முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்க பொலிஸ்மா அதிபர் நேற்று ( 5) நுகேகொட பொலிஸ் அத்தியட்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment