ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். மனித உயிர்களுடன் விளையாட முயல வேண்டாம். இங்கு கத்தோலிக்க பக்தர்கள் பௌத்த, முஸ்லிம் சமயத்தவர்கள் ஒன்றுகூடி உள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என அநுராதபுரம் ராஜாங்கன சத்தாரத்ன தேரர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3 வது வருட நினைவை முன்னிட்டு இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணியின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்டுவபிட்டிய சாந்த செபஸ்தியன் தேவஸ்தானத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட. ஆர்ப்பாட்டம் பேரணி கட்டுவபிட்டி வீதி, கொழும்பு வீதி, பிரதான வீதி, கிறீன்ஸ் வீதி ஊடாக கூட்ட மேடையை வந்தடைந்தது. சர்வ மதத் தலைவர்களும் கலந்துகொண்ட இக்கண்டனக் கூட்டத்தில் அநுராதபுரம் ராஜாங்கன சத்தாரத்ன தேரர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இரத்த ஆறு ஓட இருந்த இந்த நாட்டை பாதுகாத்தவர் எனக்கு முன்னாலுள்ள கர்தினாலாகும். அவர் இல்லாவிட்டால் இந்த நாடு இரத்தக் களறியாக மாறியிருக்கும். மோசமான அரசியல்வாதிகளும், ஞானசார தேரர், டான் பிரசாத் போன்றவர்கள் கர்தினாலுக்கு பல்வேறு அவப்பெயர்களைச் சொல்லி அழைத்தார்கள்.
மனதைத் தட்டிக் கேளுங்கள். இங்கே ஏந்தியுள்ள புகைப்படங்களில் உள்ளவர்கள் உங்கள் அம்மா, அப்பா, சகோதரர்களாக இருந்தால் நீங்கள் எடுக்கும் தீர்மானம் என்ன என்பதை கேட்க விரும்புகிறேன்.
கர்தினால் மற்றும் கத்தோலிக்க சபை இந்த தேசத்தில் சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார்கள். அதனால் நந்தசேன ராஜபக்சவுக்குச் சொல்கிறேன் நீங்கள்தான் இதன் கொலைகாரன். நீங்கள் எல்லோரும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள இவ்வாறு மனிதர்களை கொலை செய்வது உகந்ததா?
என்னிடம் இன, மத, குல, கட்சி, நிற பேதமில்லை. எவருக்கு அசாதாரணம் நடக்கின்றதோ அவர்கள் சார்பாக நான் முன்நிற்பேன். உங்கள் முன் நிற்க இன்று சந்தர்ப்பம் கிடைத்தது.
நீங்கள் எடுத்துச் செல்லும் போராட்டத்தைப் போல் காலி முகத்திடலில் இளைஞர், யுவதிகள் போராடுகின்றனர். அவர்களை சிறையில் அடைக்க முயற்சிகின்றனர். கத்தோலிக்க பிதாக்களை சிஐடி க்கு அழைக்கின்றனர். இது பௌத்தர்களாகிய எமக்கு வெட்கமாகும்.
மகாநாயக்க தேரர்கள் தமது பதவிகளை இள வயதினருக்கு வழங்க வேண்டும். தேசிய ஒற்றுமை முக்கியமாகும். நந்தசேன ராஜபக்சவுக்கு புண்ணியம் கிடைக்க சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவர்களும் ஒன்றாக செயல்படுகின்றனர்.
இவர்களை போகச் சொன்னால் போவதில்லை. வீட்டிற்குப் போனால் இவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று தெரியும். உங்கள் அனைவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். உங்களுடனேயே இருப்பேன். உங்களுக்கு வெற்றிகிடைக்க பிரார்திக்கிறேன் என்றார்.
Vidivelli
No comments:
Post a Comment