சாதாரண முஸ்லிம் இளைஞர்கள் ஆறேழு பேர் சேர்ந்து நாம் ஏதாவது செய்வோம் என நினைத்துச் செய்ததல்ல இந்தக் குண்டுத் தாக்குதல். சிறந்த ஒருங்கிணைப்புடன் ஆறு இடங்களில் மனிதப் படுகொலைகள் நடந்துள்ளன. இதற்குப் பின்னால் முஸ்லிம் இளைஞர்கள் மாத்திரமல்ல அதற்கும் மேலால் சிக்கலான மறைகரம் இருப்பது எனக்கு புரிந்தது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3 வது வருட நினைவை முன்னிட்டு இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணியின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்டுவபிட்டிய சாந்த செபஸ்தியன் தேவஸ்தானத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட. ஆர்ப்பாட்டம் பேரணி கட்டுவபிட்டி வீதி, கொழும்பு வீதி, பிரதான வீதி, கிறீன்ஸ் வீதி ஊடாக கூட்ட மேடையை வந்தடைந்தது. சர்வ மதத் தலைவர்களும் கலந்துகொண்ட இக்கண்டனக் கூட்டத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எனக்குப் பின்னால் புகைப்படங்களை ஏந்தியுள்ளவர்களைப் பார்த்தேன். அதில் உள்ளவை மிருகங்களல்ல. மனிதர்களே. அவர்கள் யாருக்கு அன்பு செலுத்தினார்களோ யாருடைய வாழ்க்கையை கட்டியெழுப்பினார்களோ அவர்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது கவலையளிக்கக்கூடிய அனுபவம்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வனங்குவதற்காகவும், பிராத்திப்பதற்காகவும் ஈஸ்டர் ஆராதனையில் கலந்துகொள்வதற்கும் தேவஸ்தானத்திற்கும் சிலர் ஈஸ்டர் உணவு அருந்துவதற்காக ஹோட்டல்களுக்கும் சென்றவர்கள். சகலரினதும் உயிர்கள் ஒரு நிமிடத்தில் நாசமாக்கப்பட்டன.
எனக்கு புரிந்தது இதில் ஒரு நாச வேலை இருப்பதாக. ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் (அது ஏழாக திட்டமிடப்பட்டிருந்தது) வெடிப்பு சம்பவம் நடந்தன.
முன்னாள் சட்டமா அதிபர் தம்புல டி லிவேரா கூறியது போல், அந்த சூழ்ச்சி இவர்களை பயன்படுத்தி செய்த படுகொலையே. இது தொடர்பாக சரியான விசாரணை நடாத்த இடம்கொடுக்காமல் அனைத்தும் கீழே போடப்பட்டன.
விசாரணை உரிய முறையில் நடைபெற்றிருந்தால் இதன் பின்னால் இருந்தவர்கள் யார் என்பது தெரியவந்திருக்கும். ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சிலர் முட்டுக்கட்டை போட்டனர். விசாரணை நடக்கும் போது சாட்சிகள் வெளிப்படும்போது அவர்களை அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றனர். பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர்.
அதனால் உண்மைகள் வெளிவரவில்லை. அவர்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தார்கள். அந்தப் பிரிவினரே இதற்கும் பின்னால் இருந்தார்கள். அதற்கு மேல் ஒன்றுமில்லை என்றார்கள். அதற்கு எதிராக இருந்த சகல சாட்சியங்களையும் இவர்கள் அழிக்க முற்பட்டார்கள்.
இது தொடர்பாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையின் சுருக்கத்தை பார்த்தால் இது ஒரு சதித்திட்டத்தின் ஊடாக நடந்திருக்கும் தாக்குதல் என்பதைப் புரியலாம்.
இதனை இந்த நாட்டை ஆட்சி செய்பவர்களும் பார்க்க முடியும். ஆனால் அவர்கள் அதனை வாசிப்பதில்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி அந்தக் குழுவின் மேல் சுமத்தி கையைக் கழுவிக் கொள்ள எத்தனிக்கிறார்கள்.
269 மரணங்களுக்கும் சிந்திய இரத்தத்திற்கும் பலம் வாய்ந்தவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.
நீர்கொழும்பில் இன்று முழு நாட்டிற்கும் உரத்த குரலில் சொல்வது இந்த ஊழல், மோசடி முறையை மாற்றுவோம் என்பதையே.
சட்டம் ஜனாதிபதியின் கீழ் உள்ளது. ஜனாதிபதிக்கு சட்டமியற்ற இயலும். சட்டமா அதிபர் ஜனாதிபதிக்கு கீழ்ப்படிபவர். அவர் சொல்வதையே சட்டமா அதிபர் செய்கிறார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஏராளம் இருக்கும் போது தெரிவு செய்யப்பட்ட சிலதை மாத்திரம் நடைமுறைப்படுத்த முயற்சி எடுத்தனர். அதற்காக 6 அமைச்சர்களைக் கொண்ட குழுவை நியமித்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில்தான் இதற்கு மேல் அவர்களுடன் வேலை செய்ய முடியாது என்பதை நாம் அறிந்துகொண்டோம். அவர்களுக்கு சார்பானதை மட்டும் அமுல்படுத்த முயற்சி எடுத்தனர். இதற்குப் பின்னால் சதி இருப்பதை இதன் மூலம் தெரிந்துகொண்டோம்.
இந்த இலங்கையில் ஊழல் மோசடி வளர்ந்து எமக்கு வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் வரிசைகள். மக்களின் தேவைகள், வயிற்றுப்பசி தொடர்பாக அக்கறை இல்லையா? இவர்களின் தொழிலுக்கு அடிவிழுந்தால் எப்படி வாழ்வது? இன்று எத்தனை குடும்பம் பசியால் வாடுகின்றனர். அவர்களின் பசியை அரசியல்வாதிகள் உணர்வதில்லையா?.
இன்று நாம் நீர்கொழும்பில் நடத்தும் ஆர்ப்பாட்டம் இலங்கை முழுவதிலும் ஏற்பட்டுள்ளதில் ஒரு பகுதியாகும். நாம் காலி முகத்திடல் இளைஞர், யுவதிகளுடன் ஒன்றிணைவோம். இலங்கை எதிர்பார்க்கின்ற துறைசார்ந்த ஒரு குழுவினரே அதனைச் செய்கின்றனர். அப்படி அந்த இளைஞர், யுவதிகள் சிந்திப்பதாயின் எமது நாடு பாதுகாப்பானது. அதனை யாரும் மட்டம்தட்ட முடியாது. இது ஒரு சமயத்திற்கோ, ஒரு இனத்திற்கோ, ஒரு மொழிக்கோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல. நாம் இலங்கையர்கள். இந்த அழகிய நாட்டின் பிரஜைகள்.
நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நடத்தும் இப்போராட்டம் நியாயம், சாதாரணம் மட்டுமன்றி முழு நாட்டையும் மீட்கும் போராட்டமாகும்.
1948 இல் சுதந்திரம் கிடைத்தாலும் 74 வருடங்களாக ஆட்சி செய்தவர்கள் நாட்டை காட்டிக் கொடுத்தார்கள். நாட்டை நாசமான நிலைக்கு கொண்டு சென்றார்கள்.
இது அரசுக்கு எதிராகச் செய்யும் போராட்டம் என்பதை விட முழு நாடும் மீண்டும் சுதந்திரமடைந்து ஊழல் மோசடியிலிருந்து வெளிவருவதற்கான போராட்டமாகவே நான் காண்கிறேன்.
நான் இன்று இரவு றோம் தேசத்திற்குச் செல்கிறேன். தனிமையில் செல்லவில்லை. கட்டுவபிட்டிய சாந்த செபஸ்தியன் தேவஸ்தானம், கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவஸ்தானம், மட்டக்களப்பு சியோன் தேவஸ்தானம் ஆகிய இடங்களில் நடாத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் 35 பேரை அழைத்துச் செல்கிறேன். பாப்பரசரின் அழைப்பின் பேரிலேயே இவர்களை அழைத்துச் சொல்கிறேன்.
பாப்பரசரை நான் சந்தித்த போது ஈஸ்டர் தாக்குதலின் தற்போதைய நிலைமையை கேட்டறிந்தார். இலங்கை அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் இதனை சர்வதேசத்திற்கு எடுத்துச் செய்வோம் என எனக்கு கூறினார். அதற்கிணங்கவே இவர்களை அழைத்துச் செல்கிறேன்.
எவரும் அரசியலை பாவித்து இன, மதவாதத்தை தூண்ட இடமளிக்காமல் சகோதரத்துவத்துடன் இந்த நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம். முழு நாட்டின் நலனைப் பற்றியே சிந்திப்போம்.
சிறு, சிறு குற்றங்களுக்காக கூடுதலானவர்கள் சிறைகளில் உள்ளனர். ஆனால் பெரிய, பெரிய நபர்கள் செய்தவற்றைப் பார்த்தால் அவர்கள் எப்படி மாட மாளிகைகளில் வாழ்வது? இது எமக்கு கேள்விக்குறியே.
கிலோ மீட்டர் கணக்கில் நடந்து வந்து இந்த பாரிய ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட உங்கள் அனைவர்களுக்கும் எனது நன்றிகள். எமக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்தப் போராட்டத்தை நாம் கைவிடமாட்டோம்.
இந்தக் கொலைகளை செய்தவர்கள் யார் என்பதையாவது குறைந்தபட்சம் தெரிந்துகொள்ள வேண்டும். எமக்கு மன்னிப்பு வழங்க முடியும். அது பிரச்சினையல்ல. ஆனால் நேர்மையாக குற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். குற்றப்பரிகாரம் பெற குறித்த நபர் மன்னிப்புக் கோர வேண்டும் என்றார்.
Vidivelli
No comments:
Post a Comment