நாட்டில் மின்சாரத்துக்கான கேள்வி அதிகரித்து உற்பத்தி குறைவடைந்துள்ளமையே மின் துண்டிப்புக்கான பிரதான காரணமென மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
தற்போதைய நீண்ட நேர மின் துண்டிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 02 ஆம் திகதி தேவையான டீசல் கிடைக்கவுள்ளதாகவும் அதனையடுத்து தற்போதைய மின் துண்டிப்பு நடவடிக்கைகளில் சில மணித்தியாலங்களை குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்படுமென்றும் தெரிவித்தார்.
போதியளவு எரிபொருள் கிடைத்தவுடன் மின் துண்டிப்பின் நேரத்தை கணிசமானளவு குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரத்துக்கான கேள்வி வெகுவாக அதிகரித்துள்ளதுடன் பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பாவித்து தற்போதைய நெருக்கடி நிலையில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாகவே மின் உற்பத்திக்கான டீசலைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை, நீர் மின் உற்பத்திக்காக உபயோகப்படுத்தப்படும் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
நூற்றுக்கு 50 வீதமான மின்னுற்பத்தி நீர் மின் திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டதுடன் தற்போது அது 20 வீதமாகக் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர், நீர் மின் உற்பத்திக்காக நீரைப் பெற்றுக் கொள்ளும் கொத்மலை, காசல்ரீ, மவுசாகலை, ரந்தெனிகல, சமனலவெவ போன்ற நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது.
அத்துடன் சில நீர்த் தேக்கங்களிலிருந்து விவசாயத்துக்கான நீர் பெறப்படுவதால் அவற்றின் மூலம் மின் உற்பத்திக்கான நீரை பெற்றுக் கொள்ள முடியாதநிலையும் காணப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு நாட்டில் போதியளவு மழைவீழ்ச்சியிருந்தும் எத்தகைய சிக்கலும் இல்லாத நிலையில் நான்கு மணித்தியால மின் துண்டிப்பு நாட்டில் இடம்பெற்றது.
தற்போது கொள்ளளவு குறைவு மற்றும் நீர் மின் உற்பத்தியின் வீழ்ச்சி காரணமாகவும் பல மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய காரணங்களை வைத்து ஊடகங்கள் மக்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில் தகவல்களை வெளியிடாமல் நிலைமையை தெளிவுபடுத்தி அதனைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
பெருமளவிலான சமய வழிபாட்டுத் தலங்களில் எத்தகைய கட்டுப்பாடுமில்லாமல் மின்சார பாவனை இடம்பெறுகிறது. அதேபோன்று சலுகைக் கட்டணத்தில் மின்சாரத்தை பெற்றுக் கொள்ளும் ஹோட்டல்கள் மிக அதிகமாக மின்சாரத்தை உபயோகிப்பதுடன் அலங்காரங்களுக்காக பெருமளவு மின் குமிழ்களை உபயோகித்தும் வருகின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment