விமல், கம்மன்பிலவை நாம் கைவிட மாட்டோம் - அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு சுதந்திரக் கட்சி கடும் கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 4, 2022

விமல், கம்மன்பிலவை நாம் கைவிட மாட்டோம் - அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு சுதந்திரக் கட்சி கடும் கண்டனம்

(எம்.மனோசித்ரா)

விமர்சனங்களை முன்வைத்தமைக்காக அமைச்சர்களை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தன்னிச்சையான தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சனிக்கிழமை (5) சுதந்திரக் கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதன்போது அரசாங்கத்தின் இவ்வகையான செயற்பாடுகள் குறித்த தமது நிலைப்பாட்டினை சுதந்திரக் கட்சி தெரிவிக்கவுள்ளது.

அத்தோடு அரசாங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கைவிடப் போவதில்லை என்பதோடு, 11 பிரதான கட்சிகளுடனான கூட்டணியை மேலும் பலப்படுத்தி முன்னோக்கி பயணிப்பதற்கும் சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

கடந்த புதன்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் ஆளுந்தரப்பினர் 11 பிரதான பங்காளி கட்சிகள் இணைந்து 'முழு நாடும் சரியான பாதைக்கு' என்ற தொனிப்பொருளில் தேசிய கொள்கை திட்டமொன்றை வெளியிட்டிருந்தன.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில மிகவும் காரசாரமாக உரையாற்றியிருந்ததோடு நிதி அமைச்சரின் தீர்மானங்களையும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்நிலையிலேயே அரசாங்கத்தில் அங்கத்துடவம் வகித்துக் கொண்டு கூட்டுப் பொறுப்பினை மீறும் வகையில் செயற்பட்டதாகக் கூறி இவ்விருவரும் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவிடம் கட்சின் நிலைப்பாட்டை வினவிய போது அவர் தெரிவித்ததாவது,

11 பங்காளி கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் எவையும் தனிமைப்படுத்திவிடக் கூடாது என்று கட்சி தலைவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய இன்று அவசர கூட்டத்தினை ஏற்பாடு செய்து இவ்விடயம் தொடர்பில் சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டினை அறிவிக்கவுள்ளோம். எவ்வாறிருப்பினும் இந்த தீர்மானத்திற்கு கடும் கண்டனத்தை வெளியிடுகின்றோம்.

ஆளுந்தரப்பின் கூட்டணியிலுள்ள அனைத்து கட்சிகளையும் அழைத்து கலந்தாலோசிப்பதை விடுத்து, இவ்வாறு அமைச்சர்களை பதவி நீக்கியுள்ளமையானது 'தலை வலிக்கு தலைணையை மாற்றும் செயற்பாடாகும்'.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெற செய்வதற்கு இவர்கள் இருவரும் பாடுபட்ட தலைவர்களாவர். இவர்களை வெளியேற்றுவதற்கு எடுத்த தீர்மானம் கவலைக்குரியதாகும்.

1970 ஆம் ஆண்டு அரசாங்கம் பாரிய வீழ்ச்சியடைந்தமையை நினைவுபடுத்துகின்றோம். கட்சியின் உள்ளக முரண்பாடுகளால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. அதன் பின்னர் அப்போதைய அரசாங்கம் பாரிய தோல்வியடைந்ததோடு, அவப்பெயரையும் பெற்றுக் கொண்டது.

இந்த அரசாங்கமும் அவ்வாறான அழிவுடனேயே நிறைவுக்கு வரும். இவ்வாறான தீர்மானங்களால் ஒருபோதும் நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்றார்.

No comments:

Post a Comment