மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களிடம் அவற்றின் விலைகளை குறைத்து சாதாரண விலையில் பொதுமக்களுக்கு வழங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல தெரிவித்தார்.
கண்டி, குண்டசாலையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 60 சதவீத்திற்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்களை எட்டு நிறுவகங்களே பிரதானமாக இறக்குமதி செய்கின்றன. அவர்கள் அதிகளவு இலாப மீட்டுகின்றனர். அவர்களிடம் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
நாடு மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் போது மேற்படி நிறுவனங்கள் அதிகளவு இலாபம் உழைப்பது நியாயமாகாது.
அதே நேரம் சில தொழிற்சங்க தலைவர்கள் நாட்டு மக்களை சிரமத்திற்கு ஆளாக்கி தமது கோரிக்கைகளை வென்றெடுக்க முற்படுகின்றனர். அவர்களது கோரிக்கைகளில் நியாயமானதும் உண்டு. சில நியாயமற்றதாகவும் உள்ளன. ஏனெனில் இன்று நாடு இக்கட்டான நிலையில் இருக்கும் போது சிலவற்றை நிறைவேற்ற முடியாதுள்ளது.
மேலும் நாட்டு மக்களுக்கு அசெளகரியம் ஏற்படும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சில தொழிற்சங்க தலைவர்கள் மிக உயர்ந்த அரசு ஊதியத்தையும் பெற்றுக் கொண்டு, மக்களை சிரமத்திற்கும் ஆளாக்கினால் அவர்களது சம்பள விபரம் உட்பட பல இரகசியங்களை வெளிப்படுத்துவேன். அப்போது எது நியாயம் எது அநியாயம் என பொதுமக்கள் தெரிந்துகொள்வர்.
கடந்த கொவிட் காலத்தில் சுகாதாரத் துறையினரின் அளப்பரிய சேவையை நாம் குறைத்து மதிப்பிட வில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
(அக்குறணை நிருபர்)
No comments:
Post a Comment