(எம்.எப்.எம்.பஸீர்)
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்ட, தற்போதைய “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞாணசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த பொதுமன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (28) தீர்மானித்தது.
மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களையுமே இவ்வாறு எதிர்வரும் மே 17 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மனித்தது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே தலைமையிலான மஹிந்த சமயவர்தன, அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.
இவ்விரு மனுக்களும் பரிசீலனைக்கு வந்த போது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, இம்மனுக்கள் தொடர்பிலான அறிவித்தல் தற்போதைய ஜனாதிபதி செயலருக்கு கிடைக்கவில்லை என்பதால், மனு மீதான பரிசீலனைகளை ஒத்தி வைக்குமாறு கோரினார்.
எனினும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தாம் அறிவித்தல்களை அவருக்கு கையளித்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்களை தங்களால் மன்றில் முன்வைக்க முடியும் எனவும் மன்றில் குறிப்பிட்டனர்.
அத்துடன் இம்மனுக்கள் 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டவை எனவும், நீண்ட நாட்களான இம்மனுக்களை, பரிசீலனைக்கு எடுக்குமாறும் கோரினர். இதனையடுத்தே, மனுக்களை பரிசீலிப்பதற்கான திகதியாக மே 17 ஆம் திகதியை நீதிமன்றம் நிர்ணயம் செய்தது.
மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் தாக்கல் செய்த மனு சார்பில் சட்டத்தரணிகளான லசந்த குருசிங்க, கயதி விக்ரமநாயக்க ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா ஆஜரானார். சந்தியா எக்னெலிகொடவின் மனு சார்பில் சட்டத்தரணி ஹரினி ஜயவர்தன, புலஸ்தி ஹேவமான்ன ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி அஸ்திக தேவேந்ர ஆஜரானார்.
ஞானசார தேரருக்காக சட்டத்தரணி திஸ்ய வேரகொடவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜரானதுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்காக சட்டத்தரணி புலஸ்தி ரூபசிங்கவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆஜரானார்.
முன்னதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞாணசார தேரர் நீதிமன்றை அவமதித்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவரை குற்றவாளியாக கண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் 19 வருட சிறைத் தண்டனை விதித்து கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி தீர்ப்பளித்தது.
நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நான்கு குற்றங்கள் தொடர்பில் விதிக்கப்பட்ட இந்த 19 வருட சிறைத் தண்டனையை 6 வருடங்களில் அனுபவிக்க இதன்போது அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியும் தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசருமான ப்ரீத்தி பத்மன் சுரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ( தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் ) ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு கட்டளையிட்டிருந்தது.
2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற தனக்கு சம்பந்தமே இல்லாத வழக்கொன்றில் ஆஜராகி நீதிமன்றின் கெளரவம், சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுத்தமை ஊடாக மன்றை அவமதித்தமை, பீ 74/7/10 எனும் வழக்கு ( எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை குறித்த நீதிவான் நீதிமன்ற வழக்கு ) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, அதனை வழி நடாத்திய அரச சிரேஷ்ட சட்டவாதி திலீப பீரிஸை (தற்போதைய சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல்) அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டி அவமானப்படுத்தியமை, நீதிமன்றின் கட்டளைக்கு செவிசாய்க்காமை, நீதிமன்ற சுயாதீன தன்மைக்கு சவால் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அரசியலமைப்பின் 105 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக சட்டமா அதிபரால் ஞானசார தேரருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நான்கு குற்றச்சாட்டுக்களுமே சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தே தண்டனையளித்திருந்தது.
அதன்படி முதலாவது, இரண்டாவது குற்றங்கள் தொடர்பில் ஞானசார தேரருக்கு தலா 4 வருட கடூழிய சிறைத் தண்டனையையும், 3 ஆம் குற்றத்துக்கு 6 வருட கடூழிய சிறைத் தண்டனையையும், 4 குற்றத்துக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனையுமாக மொத்தம் 19 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை 6 வருடங்களில் அனுபவிக்கவும் இதன்போது நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தண்டனையை அவர் அனுபவித்து வந்த நிலையிலேயே, பல தரப்பில் இருந்தும் ஞானசார தேரரை பொது மண்ணிப்பின் கீழ் விடுவிக்க கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் கடந்த 2019 மே மாதம் நடுப் பகுதியில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற அப்போதைய ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன, அங்கு வெலிக்கடை சிறை வைத்தியசாலையில் வைத்து ஞானசார தேரருடன் கலந்துரையாடியிருந்தார்.
அதன் பின்னர் 2019 மே 21 ஆம் திகதி சிறைச்சாலையிடமிருந்து விஷேட அறிக்கை கோரி 2019 மே 22 ஆம் திகதி அவரை விடுவிப்பதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டிருந்தார்.
இந் நிலையில் 2019 மே 23 ஆம் திகதி அந்த ஆவணம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் மாலை வேளையில் அது சிறைச்சாலைகள் ஆணையாளரின் கைகளுக்கு கிடைத்திருந்தது. இதனையடுத்தே ஜனாதிபதி கையெழுத்திட்ட பொது மன்னிப்பு உத்தரவில் உள்ளதைப் போன்று ஞானசார தேரர் 2019 மே 23 ஆம் திகதி பூரணமாக விடுவிக்கப்பட்டார்.
இதனை ஆட்சேபித்தே உயர் நீதிமன்றில் இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவை பரிசீலனை நிலையில் உள்ளன. அவையே பரிசீலனைக்காக திகதி குறிக்கப்பட்டது..
No comments:
Post a Comment