(எம்.எம்.சில்வெஸ்டர்)
பண்டிகைக் காலத்தின்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவீரட்ன தெரிவித்தார்.
நிதி அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சின் தலையீட்டுடன், இந்திய கடனுதவியுடன் கொழும்பு துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விரைவில் சந்தைக்கு விட முடியும்.
இவ்விடயம் குறித்து அச்சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவீரட்ன தெரிவிக்கையில், "நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் 75 சதவீதமானவை இந்தியாவிலிருந்தும் 25 சதவீதமானவை பாகிஸ்தான், சீனா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதில், அரிசி, சீனி, வெந்தயம், மிளகாய் மற்றும் பிற மசாலா பொருட்கள் இந்தியாவிலிருந்தும், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்றன பாகிஸ்தானிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
சீனாவிலிருந்து பூண்டு போன்ற மசாலா பொருட்களையும், அவுஸ்திரேலியாவிலிருந்து பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களையும் இறக்குமதி செய்யப்படுகிறது" என்றார்.
நாம் கடனுக்கு இறக்குமதி செய்திருந்த பொருட்கள் இலங்கையில் விற்றுத்தீர்ந்த போதிலும், அதற்கான கடனை நாம் அமெரிக்க டொலர்களில் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது நாட்டில் டொலருக்கான பெறுமானம் அதிகரித்துள்ளதால் பெரும் நஷ்டத்திற்கு முகங்கொடுத்து வருகிறோம்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு இலங்கையில் காணப்படும் டொலர் நெருக்கடி மாத்திரம் காரணம் அல்ல எனவும், உலக சந்தையில் உரிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையும் இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு மற்றுமொரு காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment