எண்ணெய் கப்பலுக்காக 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த தயாராக இருந்தபோதும் உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதால் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இதனால் லீற்றருக்கு 80 ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வியாழக்கிழமைக்குள் எரிபொருள் கியூவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சராக நேற்று (07) கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் காமினி லொக்குகே இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், “இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து அதிகாரிகளும் நாடு முழுவதும் எரிபொருளை விநியோகிப்பதில் வார இறுதி முழுவதையும் கழித்தனர். தற்போது பெரும்பாலான பெற்றோல் நிலையங்களில் எரிபொருள் வரிசைகள் இல்லை.
இன்று 28,300 மெட்ரிக் டொன் டீசல் கொண்ட மற்றுமொரு கப்பல் வந்துள்ளது. அந்த எரிபொருளை இன்றோ நாளையோ இறக்க எதிர்பார்க்கிறோம்.
எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் இந்த நாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள வரிசைக்கு முற்றுப்புள்ளி வைத்து வழமை போன்று பொதுமக்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்குவோம்.
மேலும், தற்போது குறைந்த திறனில் இயங்கி வரும் சுத்திகரிப்பு நிலையத்தில் எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேவையான மசகு எண்ணெய் பெறுவதில் இருந்த சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்தது.
அடுத்த வாரம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எந்த பிரச்சினையும் இல்லாமல் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்க முடியும்.
தற்போது மின்சார சபையினால் எரிபொருள் விநியோகம் காரணமாக எவ்வித வெட்டுமின்றி மின்சாரம் வழங்க முடியும்.
நேற்றைய காலை நிலவரப்படி ஒரு பெரல் மசகு எண்ணெய் விலை 130 டொலராக உயர்ந்துள்ளது. எண்ணெய் கப்பலுக்கு 35 மில்லியன் டொலர் கொடுக்க நாங்கள் தயாராக இருந்தோம், ஆனால் இப்போது அதற்கு 50 மில்லியன் டொலர் செலுத்த வேண்டும்.
இந்த விலை உயர்வால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு டீசலில் இருந்து மட்டும் லீற்றர் ஒன்றுக்கு 80.00 ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி எரிபொருள் விலை தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் அந்த இழப்பை ஓரளவு குறைக்க முடியும். சுத்திகரிப்பு பொருட்களை இறக்குமதி செய்யும் போது அதிக அளவு வரி செலுத்த வேண்டும் என்றார்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment