நாட்டின் நெருக்கடிக்கு முழுக்காரணம் பஷில் என்கின்றனர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 8, 2022

நாட்டின் நெருக்கடிக்கு முழுக்காரணம் பஷில் என்கின்றனர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில

(ஆர்.யசி)

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்த உண்மைகளை மக்களுக்கு தெரிவித்தமைதான் பிரச்சினைகளுக்கு காரணம் என பிரதமரோ அல்லது வேறு எவருமோ கூறுவார்கள் என்றால் அவர்கள் முட்டாள்த்தனமான கருத்தாளர்கள் என்றே கூறுவோம் எனவும், நாட்டின் இந்த நிலைமைக்கு நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவே காரணம் எனவும் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்தனர்.

அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் அரசாங்கத்தில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகையில், நாட்டின் பொருளாதார நெருக்கடி, குறிப்பாக வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடியும் அதன் மூலமாக ஏற்பட்டுள்ள ஏனைய மோசமான தாக்கங்கள் குறித்தே நாட்டு மக்களுக்கு தெரிவித்தோம்.

ஒருவேளை எம்மை நீக்கி விட்டு வெளிநாட்டு கையிருப்பை பெற்றுக் கொள்ள முடியும், நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என அரசாங்கம் நினைத்திருக்க முடியும். அதனால்தான் எம்மை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கினார்களோ தெரியவில்லை.

5 ஆம் திகதியுடன் நாட்டின் மின்சார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என்றனர், ஆனால் இன்றும் மின்சாரம் துண்டிப்பு குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

எரிவாயு தடுப்பாடு அதிகரித்துள்ளது சரியான நேரத்தில் தீர்மானம் எடுக்க முடியாத காரணத்தினால்தான் இவ்வளவு மோசமான பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

குறிப்பாக நிதி அமைச்சர் இந்த நாட்டில் பிரச்சினைகள் இருக்க வேண்டும் என நினைக்கின்றார் தொடர்ச்சியாக நெருக்கடி நிலையில் நாடு இருக்க வேண்டும், அதன் மூலமாக நாட்டை பாரிய நெருக்கடிக்குள் தள்ளி மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்புக்குள் இலங்கையை கொண்டுவரும் சூழ்ச்சியை அவர் முன்னெடுத்து வருகின்றார்.

இந்த சூழ்ச்சி தெரிந்தும், அதனை கண்டுகொள்ளாது அல்லாது தெரிந்தும் தெரியாததைப்போல் இருக்க எம்மால் முடியாது. அதனால்தான் இந்த உண்மைகளை நாட்டிற்கு கூறினோம். அதன் பிரதிபலன் எம்மை பதவியில் இருந்து நீக்குவது என்றால் அதனை ஏற்றுக் கொள்ளவும் நாம் தயாராக உள்ளோம்.

எரிவாயுவை பெற்றுக் கொள்ள நாணயக் கடிதத்தை திறக்க முடியாதுள்ளது என்றால் எவ்வாறு நாட்டிற்குள் எரிபொருளை, எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியும்.

எம்மிடம் வெளிநாட்டு கையிருப்பு இல்லை என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆகவே இவ்வாறான முட்டாள்த் தனமான விடயங்களை அரசாங்கத்தில் இருந்து கொண்டு எம்மால் கூற முடியாது என்றார்.

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இது குறித்து தெரிவிக்கையில், அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள காரணத்திற்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறி அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற நோக்கம் எம்மிடத்தில் இல்லை, அமைச்சுப் பதவிகளை பரிந்துள்ளனர்.

இப்போது நாம் அரசாங்கத்திற்குள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளோம். அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல விடயங்களை நாம் ஆதரிக்க முடியும், அதேபோல் அரசாங்கம் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதகமான ஏதேனும் தீர்மானங்களை கொண்டுவந்தால் அதனை நேரடியாக எதிர்ப்போம்.

அரசாங்கத்திற்குள் ஒரு சிலர் எம்முடன் முரண்படுவதற்காக நாம் உருவாக்கிய அரசாங்கத்தை முழுமையாக தூக்கி எறிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதா அல்லது அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஏனைய கட்சியினருடனும் கலந்துரையாடி பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடுகளை கேட்டறிந்து தீர்மானம் எடுப்போம்.

நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமைக்கு காரணமானவர்கள் அரசாங்கத்தில் தீர்மானம் எடுக்கும் இடத்தில் உள்ளனர். அவர்கள் சரியாக தீர்மானம் எடுத்திருந்தால் இன்று நாடு வீழ்ச்சி கண்டிருக்காது.

எனவே இனியும் அரசாங்கத்தில் இருந்துகொண்டு முட்டாள்த் தனமான கருத்துக்களை முன்வைக்காது மக்களின் நிலைமையை சிந்தித்து தீர்மானம் எடுத்தால் அனைவருக்குமே நல்லது என்றார்.

No comments:

Post a Comment