மியன்மார் அரிசி கொள்வனவு தொடர்பாக தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் உண்மைக்கு புறம்பானது - பந்துல குணவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 8, 2022

மியன்மார் அரிசி கொள்வனவு தொடர்பாக தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் உண்மைக்கு புறம்பானது - பந்துல குணவர்த்தன

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் அரிசி தேவையை கருத்திற் கொண்டு மியன்மாரில் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தோம். என்றாலும் அரிசி கொள்வனவு தொடர்பாக தற்போது தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் உண்மைக்கு புறம்பானது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) வர்த்தக அமைச்சு தொடர்பான விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் அரிசி தேவையை கருத்திற் கொண்டு மியன்மாரில் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தோம்.

அதற்கிணங்க முதற்கட்டமாக ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் வெள்ளை அரிசி இறக்குமதி செய்யப்பட்டு நியாயமான விலையில் சதொச மூலம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சபையில் தெரிவித்த அமைச்சர் அரிசி கொள்வனவு விலை தொடர்பில் வெளியிடப்படும் விமர்சனங்கள் உண்மைக்குப் புறம்பானவை. மியன்மார் தூதரகமும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

நிலவும் கொரோனா சூழ்நிலையில் இறக்குமதிக்கான கட்டணம் கொள்கலன் கட்டணம் அதிகரித்துக் காணப்படும் நிலையில் நாம் அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்டுள்ள விலையை விட 15 மில்லியன் டொலர் குறைவான விலைக்கே அரிசியை கொள்வனவு செய்துள்ளோம்.

டொலர் பிரச்சினை நிலவுகின்ற நிலையில் அரிசி கொள்வனவுக்காக சீன யுவான் மூலம் அதற்கான விலையை செலுத்த முடியும். அதற்கிணங்க இறக்குமதி செய்யப்படும் அரிசியில் ஒரு தொகையை கையிருப்பாக களஞ்சியசாலையில் பாதுகாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மியன்மார் அரசாங்கத்துடன் நாம் தொடர்ச்சியாக மேற்கொண்ட கலந்துரையாடல் காரணமாக 460 அமெரிக்க டொலருக்கு இணக்கம் காணப்பட்ட நிலையில் 15 டொலர் குறைவாகவே அதனைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.

மேற்படி அரிசி கொள்வனவு விலை தொடர்பில் முரண்பாடான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் அது தொடர்பில் தெளிவான விளக்கத்தை மியன்மார் தூதரகம் வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment