சி.ஐ.டியின் முன்னாள் பிரதானியின் அடிப்படை உரிமை மீறல் மனு : கைது செய்யப்படுவதை தடுக்குமாறும், 10 கோடி ரூபா நட்ட ஈடும் கோரி மனு தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 8, 2022

சி.ஐ.டியின் முன்னாள் பிரதானியின் அடிப்படை உரிமை மீறல் மனு : கைது செய்யப்படுவதை தடுக்குமாறும், 10 கோடி ரூபா நட்ட ஈடும் கோரி மனு தாக்கல்

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்றதை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ்மா அதிபரால் பெயரிடப்பட்ட விசாரணை அதிகாரியான சி.ஐ.டி. இற்கு அப்போது தலைமை வகித்த அத்திணைக்களத்தின் அப்போதைய பிரதானி முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.

குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பீ அறிக்கை பிரகாரம் தான் கைது செய்யப்படுவதையும் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதையும் தடுத்து உத்தரவிடுவதுடன் தனக்கு 10 கோடி ரூபாவை நட்ட ஈடாக செலுத்த உத்தரவிடுமாறும் அவர் கோரியுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா, அத்திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவின் பிரதான பெண் பொலிஸ் ப ரிசோதகர் நிரோஷனி ஹேவாபத்திரண விஷேட பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்துக சில்வா, சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகர, அத்திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் டப்ளியூ. திலகரத்ன, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் சில்வா, மேல் மாகாண குற்றவியல் விவகார பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன, மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பிரதானி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித்த திஸாநாயக்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஜெனரல் கமல் குணரத்ன, சட்டமா அதிபர் ஆகிய 14 பேர் இம்மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை வழிநடத்திய மொஹமட் ஹாசிம் மொஹமட் சஹரான் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பி அறிக்கைக்கு அமைய, தம்மை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் 9/1 சரத்திற்கு அமைய கைது செய்யப்படுவதற்கும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியால் தமக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கும் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு இந்த மனுவூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment