உக்ரைனில் தங்கியுள்ள அனைத்து அமெரிக்க குடிமக்களையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்,
உக்ரைன் எல்லை பகுதிகலில் ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. ஒருவேளை உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அங்குள்ள அமெரிக்கர்களை மீட்க தாயக படைகளை அனுப்ப மாட்டேன் என்றும் பைடன் கூறியிருக்கிறார்.
அந்த பிராந்தியத்தில் "நிலைமை விரைவாக மோசமாகக் கூடும்" என்றும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
எல்லைக்கு அருகே ஒரு லட்சம் படையினரை குவித்துள்ள போதிலும், உக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்தவொரு திட்டமும் தன்னிடம் இல்லை என்று ரஷ்யா திரும்பத்திரும்ப மறுத்து வருகிறது.
ஆனால் தமது அண்டை நாடான பெலாரஸுடன் மிகப்பெரிய அளவிலான ராணுவ போர் ஒத்திகையை ரஷ்யா தொடங்கியிருக்கிறது.
இதேவேளை கடல் பகுதியை தாங்கள் அணுகாத வகையில் ரஷ்யா முடக்கியிருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது.
இந்த விஷயத்தில் முன்னாள் சோவியத் நாடான உக்ரைன், நேட்டோவில் சேராமல் இருப்பதை உறுதி செய்ய "சில சிவப்பு கோடுகளை" அமுல்ப்படுத்த விரும்புவதாக ரஷ்யா கூறுகிறது.
இந்த பதற்றங்களுக்கு மத்தியில், பல தசாப்தங்களில் இல்லாத வகையில் ஐரோப்பா மிகப்பெரிய பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்த பதற்றங்களுக்கு வலு சேர்க்கும் வகையில், உக்ரைனில் உள்ள தமது நாட்டு குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
என்பிசி நியூஸ் தொலைக்காட்சியிடம் பேசிய ஜோ பைடனும், "அமெரிக்க குடிமக்கள் இப்போதே வெளியேற வேண்டும்," என்று கூறினார்.
"நாம் உலகின் மிகப்பெரிய படைகளில் ஒன்றை கையாளப் போகிறோம். இது மிகவும் வித்தியாசமான சூழ்நிலை. விரைவாகவே நிலைமை மோசமாகலாம்," என்று அவர் தெரிவித்தார்.
உக்ரைனில் இருந்து தப்பி அமெரிக்கர்கள் வரும் சூழ்நிலை ஏற்பட்டால், உங்களுடைய படைகளை அனுப்ப தூண்டப்படுவீர்களா என கேட்டதற்கு, "அது நடக்காது. அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் ஒருவரையொருவர் சுடத் தொடங்கும் போது அது உலகப் போராகும். நாம் முன்பு இருந்ததை விட இப்போது வித்தியாசமான உலகில் இருக்கிறோம்" என்று பைடன் பதிலளித்தார்.
இதற்கிடையில், உலகத் தலைவர்கள் பலரும் உக்ரைன் மீதான தற்போதைய நெருக்கடியைத் தணிக்க தங்களுடைய ராஜீய முயற்சிகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாத மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தலைவர்களுடன் நடந்த ஒன்பது மணி நேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியவில்லை என்று ரஷ்யாவும் உக்ரைனும் கடந்த வியாழன் தாமதமாக அறிவித்தன.
உக்ரைனில் தூதர் ஆண்ட்ரே யெர்மாக், கருத்து வேறுபாடுகள் உள்ளபோதும், "பேச்சுவார்த்தையை தொடருவதற்கு விருப்பம் உள்ளது" என்றார்.
உக்ரைனின் தெற்கு கிரைமியா தீபகற்பத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு எல்லை பதற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ரஷ்யாவின் அந்த நடவடிக்கை முதல், ரஷ்யாவின் எல்லைக்கு அருகிலுள்ள கிழக்குப் பகுதிகளில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் உக்ரைனிய ராணுவத்தினர் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார்கள்.
முன்னதாக, பிரிட்டன் பிரதமர் பேசும்போது, "சண்டையை நிறுத்தக்கூடிய கடுமையான முயற்சி" மற்றும்"அமைதியான ராஜீய நடவடிக்கை" மூலம் தற்போதைய நெருக்கடிக்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியும் என்று நம்புவதாகக் கூறினார், ஆனால் சம்பந்தப்பட்ட நாடுகளின் ஈடுபாடு "மிக, மிக அதிகமாக" இருக்க வேண்டும் என்று போரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.
நேட்டோ செகரட்டரி ஜெனரல் யென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்குடன் பிரஸ்ஸல்ஸில் நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய போரிஸ் ஜோன்சன், உக்ரைனை ஆக்கிரமிப்பது குறித்து ரஷ்யா இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று நான் இன்னும் நம்பவில்லை, ஆனால் பிரிட்டனின் உளவுத்துறை இந்த விஷயத்தில் "கடுமையான கவனத்துடன் உள்ளது," என்றார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் மற்றும் பிரிட்டன் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்த மறுநாளான வெள்ளிக்கிழமை பிரிட்டன் பாதுகாப்புத்துறை செயலாளர் பென் வாலஸ் மாஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷோய்குவை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ரஷ்யா உடனான பிரிட்டனின் உறவுகள் ஏற்பட "விரும்பிய பலவற்றை விட வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளன" என்றார்.
ரஷ்யாவை "பனிப்போர் கால சொல்லாடலை" பயன்படுத்துவதாக பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் டிரஸ் குற்றம்சாட்டினார்.
மாஸ்கோவிற்கு பயணம் செய்வதற்கு முன்பு பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ், உக்ரைனிய படையினருக்கு தேவைப்படும் உடல் கவச ஆடை, தலைக்கவசங்கள் மற்றும் போர்க்கால பூட்ஸ்கள் உள்ளிட்ட தற்காப்பு உபகரணங்களை பிரிட்டன் வழங்கும் என்று உறுதிப்படுத்தினார்.
நேட்டோ நாடுகள் "இந்த விஷயத்தில் பிரிட்டன் அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்காது" என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, ரஷ்யாவின் கடற்படை போர் ஒத்திகைக்கு தயாராகி வரும் நிலையில், தமது படையினர் கடலுக்கு செல்வதை ரஷ்யா தடுத்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியது.
இது குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், அசோஃப் கடல் முற்றிலும் முடக்கப்பட்டு விட்டது. கருங்கடல் பாதையை ரஷ்ய படையினர் கிட்டத்தட்ட முழுமையாக துண்டித்து விட்டனர் என்று கூறினார்.
உக்ரைனின் தெற்கே உள்ள கருங்கடல், அசோஃப் கடல் ஆகிய இரு கடல்களில் அடுத்த வாரம் ரஷ்யாவின் கடற்படை போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
எனினும், அசோஃப் கடலை முடக்கும் முடிவை ரஷ்யா திரும்பப் பெற்றுக் கொண்டதாக உக்ரைனிய ஊடக தகவல்கள் கூறுகின்றன.
அதே சமயம், கருங்கடலின் இரண்டு பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆறு நாட்களுக்கு மூடப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
கிரைமியாவில் பயிற்சிகளை தொடங்கிய ரஷ்யா
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிரைமியாவில் ரஷ்ய கடற்படை கப்பல்கள் ஏற்கெனவே பயிற்சியை தொடங்கி விட்டன. உக்ரைனின் வடக்கே பெலாரஸிலும் 10 நாட்களுக்கான ராணுவ பயிற்சிகள் தொடர்ந்தன.
ரஷ்யா உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு படையெடுப்பை முயற்சித்தால், தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரஷ்ய படையினரை விரவைக உக்ரைன் தலைநகரான கீஃபுக்கு அனுப்பி வைத்து அந்நாட்டின் மீதான தாக்குதலை ரஷ்யா எளிதாக்கும் என்ற அச்சம் உள்ளது.
ஆனால், எல்லையில் நடக்கும் போர் ஒத்திகை முடிந்த பிறகு அந்த படையினர் நிரந்தர தளங்களுக்குத் திரும்பும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனும் தனது 10 நாட்கள் ராணுவ பயிற்சிகளை தொடங்கியுள்ளது. அது பற்றிய சில தகவல்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்
தங்களுடன் ஆழ்ந்த சமூக மற்றும் கலாசார உறவுகளைக் கொண்ட முன்னாள் சோவியத் குடியரசான உக்ரைன், ஒரு நாள் மேற்கத்திய பாதுகாப்புக் கூட்டணியான நேட்டோவில் இணையலாம் என்பதை ரஷ்யா ஏற்கவில்லை. அத்தகைய யோசனையை கூட நிராகரிக்க வேண்டும் என்கிறது ரஷ்யா.
2014ஆம் ஆண்டு முதல் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் நடந்த ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. அப்போது முதல் எல்லையில் நடந்த மோதல்களில் 14,000 பேர் இறந்தனர். அதில் பலரும் பொதுமக்கள்.
கிழக்கு உக்ரைனில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர மின்ஸ்க் ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படும் உடன்படிக்கை மீது புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தப்பட்டால், அது நெருக்கடியைத் தணிக்க ஒரு அடிப்படையாகப் பயன்படுத்தப்படலாம் என்று சில கருத்துக்கள் உள்ளன.
இந்த ஒப்பந்தங்களை உக்ரைன், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் 2014-2015 இல் ஆதரித்தன.
No comments:
Post a Comment