ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை சந்தேகநபர் பிரிட்டனில் கைதான விவகாரம் : குற்றவாளிகளை இலங்கை தண்டிக்காவிடின் வேறு தெரிவுகள் இருப்பதைக் காண்பிக்கிறது - சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 27, 2022

ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை சந்தேகநபர் பிரிட்டனில் கைதான விவகாரம் : குற்றவாளிகளை இலங்கை தண்டிக்காவிடின் வேறு தெரிவுகள் இருப்பதைக் காண்பிக்கிறது - சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்

(நா.தனுஜா)

ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டுள்ளமையானது, குற்றங்களைப் புரிந்தவர்கள் உலகின் எந்தவொரு மூலையிலும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதையும் அத்தகைய குற்றங்களுக்கு இலங்கை போன்ற நாடுகள் தண்டனை வழங்காவிட்டால், அதனைச் செய்வதற்கான வேறு தெரிவுகள் உள்ளன என்பதையும் காண்பிக்கின்றது என்று சர்வதேச மனித உரிமைசார் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

பி.பி.சி செய்திச் சேவையின் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் சில தினங்களுக்கு முன்னர் பிரிட்டனில் கைது செய்யப்பட்ட நிலையில், அது குறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் மற்றும் சித்திரவதைகளை முடிவிற்குக்கொண்டுவரல், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைக்கோருவதற்கான அமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, பி.பி.சி செய்திச் சேவையின் ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபரரொருவர் பிரிட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையை நாம் வரவேற்கின்றோம்.

இந்தப் படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, மெட்ரோபொலிட்டன் பொலிஸாரின் போர்க் குற்றங்கள் தொடர்பான குழுவினரால் மேற்படி 48 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

குறித்த கைதிற்கு வழிவகுத்துள்ள செயலூக்கம் வாய்ந்த விசாரணையானது, சுமார் 22 வருடங்களுக்குப் பின்னரும் கூட நீதி மற்றும் பொறுப்புக் கூறல் ஆகியவற்றை உறுதி செய்தல் தொடர்பில் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் கொண்டிருக்கும் ஈடுபாட்டினைக் காண்பிக்கின்றது.

ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்பவர்கள் உலகின் எந்த மூலையிலும் பாதுகாப்பாக இருக்க முடியாது. பி.பி.சி ஊடகவியலாளரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் பிரிட்டனின் மறைந்திருக்கலாம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும்.

கடந்த 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனத்தின் படுகொலையானது இலங்கையில் நடைபெற்ற போரின் போதான ஊடகவியலாளர் படுகொலைகளின் இரத்தக்கறைபடிந்த ஓர் பாதையின் தொடக்கமாக அமைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அநேகமானோர் தமிழர்களாகவே இருக்கின்றனர்.

குற்றங்களைப் புரிந்தவர்கள் அதற்கான தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதுமாத்திரமன்றி அத்தகைய குற்றங்களுக்கு இலங்கை போன்ற நாடுகள் தண்டனை வழங்காவிட்டால், அதனைச் செய்வதற்கான வேறு தெரிவுகள் உள்ளன என்பதற்கான ஓர் அடையாளமாக ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை வழக்குக் காணப்படுகின்றது.

இவ்வழக்கைப் பொறுத்தமட்டில் இலங்கை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும், பிரிட்டன் பொலிஸார் நீதியை நிலைநாட்டுவார்கள் என்று நம்புகின்றோம்.

கடந்த 2004 - 2010 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களின் பெயர்களை ஆவணப்படுத்தியுள்ள 'இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' என்ற அமைப்பு, இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் நிமலராஜனின் வழக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்துள்ளது.

மிக மோசமான குற்றங்களைப் புரிந்த சந்தேகநபர்களும் குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து பாதுகாப்பை அனுபவித்து வருபவர்களும், அவர்கள் எங்கிருந்தாலும் சுமார் இரு தசாப்தங்களுக்குப் பின்னர் கூட தமது செயற்பாடுகளுக்குரிய சட்ட ரீதியான பின்விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும்.

ஆகவே படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனுக்கான நிதி நிலைநாட்டுதல் என்பது குற்றம் புரிந்தவர்களுக்கும் மிக மோசமான குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் தெளிவானதொரு செய்தியைக் கூறுவதாக அமையும்.

அதேவேளை இவ்வழக்கு, போர்க் குற்றங்கள் மற்றும் சர்வதேசக் குற்றங்கள் தொடர்பில் குற்றம் புரிந்தவர்களைப் பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தக் கூடிய வகையில் பிரிட்டனின் நீதித்துறை இருக்கின்றதா என்பதற்கான 'சோதனை வழக்காகவும்' இருக்கும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment