இலங்கையில் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரிப்பு : வைத்திய நிபுணர் ஹசித லியனாராச்சி - News View

About Us

About Us

Breaking

Saturday, February 26, 2022

இலங்கையில் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரிப்பு : வைத்திய நிபுணர் ஹசித லியனாராச்சி

(எம்.மனோசித்ரா)

நாட்டில் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரித்துள்ளது. கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் தற்போது சுமார் 50 சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, கடந்த இரு வாரங்களுக்குள் மூவர் உயிரிழந்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஹசித லியனாராச்சி தெரிவித்தார்.

ஆரோக்கியமான சிறுவர்களுக்கு கொவிட் தொற்றினால் பாரிய ஆபத்துக்கள் இல்லை என்ற போதிலும், நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் அது மரணம் வரை செல்லும் என்றும் வைத்திய நிபுணர் ஹசித லியனாராச்சி சுட்டிக்காட்டினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது சிறுவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரித்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இதுவரையில் தடுப்பூசி வழங்கப்படாமையும் இதில் தாக்கம் செலுத்துகிறது.

அத்தோடு தற்போது அனைத்து மாணவர்களுக்கும் கல்வி செயற்பாடுகளும் ஆரம்பமாகியுள்ளன. மேலும் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அறியாமையால் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்காமையும் இதற்கான பிரதான காரணியாகும்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் நாளாந்தம் 3 - 4 சிறுவர்களே கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் ஜனவரி மத்தியில் இந்த எண்ணிக்கை 30 - 40 ஆக உயர்வடைந்து, தற்போது 20 - 30 ஆகக் குறைவடைந்துள்ளது. ஆரோக்கியமான சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளானாலும் அவர்களுக்கு பெரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படாது.

கடந்த 2 - 3 வாரங்களுக்குள் கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் நால்வர் ஏதேனுமொரு நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களாவர். எனவே இவ்வாறு நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை கொவிட் அபாயத்திலிருந்து பாதுகாப்பதற்கு பெற்றோர் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

தற்போது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்கப்படாத வயது மட்டத்திலுள்ள சிறுவர்களுக்கு சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

அத்தோடு சிறார்களுக்கு வழமைக்கு மாறாக ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும்.

கொவிட் தொற்றுக்கு அப்பால் அண்மை காலமாக டெங்கு நோயுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவுள்ளது.

இவர்களில் பெருமளவானோர் டெங்கு மற்றும் கொவிட் ஆகிய இரு நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்களாகவுள்ளனர். எனவே பெற்றோர் டெங்கு நோய் குறித்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment