உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 3 ஆவது நாளாக இன்றும் மேற்கொண்டு வருகின்றன.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் அங்கு நிலவுகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில் ஐரோப்பிய யூனியன் கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
47 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியன் கவுன்சிலில் ரஷ்யாவும் அங்கமாக உள்ளது.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு மனித உரிமைகள், ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் உலக அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு எதிர்ப்பு நடவடிக்கையாக ஐரோப்பிய யூனியன் கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது உடனடியாக அமுலுக்கு வருவதாகவும், எனினும் இது தற்காலிகமான ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்டாலும் ரஷ்யாவுடன் தகவல் தொடர்பு வழிகள் முடக்கப்படாது என்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை 3,500 க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக, உக்ரைன் ராணுவம் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அதில், இந்த படையெடுப்பில் ஈடுபட்ட 3,500 க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 14 விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 102 டேங்குகள் ஆகியவற்றையும் ரஷ்யா இழந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் குறித்து ரஷ்யா இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.
No comments:
Post a Comment