(எம்.எப்.எம்.பஸீர்)
கம்பஹா - கலகெடிஹேன பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற போது அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட முட்டை தாக்குதல் தொடர்பில், முறையான பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கும் தனித்தனியாக இரு கடிதங்களை அனுப்பி இவ்வாறு அவர் கோரியுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க மீது நடாத்தப்பட்ட முட்டை தாக்குதல் தொடர்பில், இருவர் கட்சி ஆதரவாளர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆதரவாளர்கள் எனவும், அமைச்சரே தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகவும் சமூக வலைத்தலங்களில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறன நிலையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விசாரணை கோரி அனுப்பியுள்ள குறித்த கடிதங்களில், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை தான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை எனவும், அரசாங்கத்தை அசெளகரியத்துக்கு உட்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு ஒரு தரப்பால் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்
பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
No comments:
Post a Comment