(இராஜதுரை ஹஷான்)
சேதனப் பசளைத் திட்டத்தை வெற்றி பெற செய்வதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தரப்பினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை. சேதனப் பசளைத் திட்டம் தோல்விடைந்ததன் விளைவை தற்போது எதிர்கொள்கிறோம். எக்காரணிகளுக்காகவும் உணவு தட்டுப்பாடு ஏற்படாது. உணவுப் பொருட்களை நிவாரண அடிப்படையில் நாட்டு மக்களுக்கு வழங்குவோம் என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சேதனப் பசளைத் திட்டம் சிறந்த திட்டமாக காணப்பட்டாலும் அது சவால்மிக்கது. மக்களின் எதிர்காலத்தை கருத்திக் கொண்டு ஜனாதிபதி நிலைபேறான விவசாய கொள்கையில் சேதனப் பசளைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
சேதனப் பசளைத் திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு தரப்பினர் சேதனப் பசளைத் திட்டத்தை வெற்றி பெற செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை. சேதனப் பசளைத் திட்டம் தோல்வியடைந்தன் விளைவை தற்போது எதிர்கொள்கிறோம்.
அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு ஆதரவாக செயற்படுபவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாத காலப்பகுதியில் நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். எக்காரணிகளுக்காகவும் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது.
எதிர்வரும் நாட்களில் மரக்கறி, தானியங்களை நிவாரண அடிப்படைவில் விநியோகிக்க உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நிலைபேறான விவசாய கொள்கையினை சிறந்த முறையில் செயற்படுத்துவோம் என்றார்.
No comments:
Post a Comment