புத்தாண்டிலும் மண்ணெண்ணெய், எரிவாயுவுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 1, 2022

புத்தாண்டிலும் மண்ணெண்ணெய், எரிவாயுவுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றினால் எதிர்கொண்ட பாதிப்புக்களையடுத்து, பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் 2022 ஆம் ஆண்டு பிறந்துள்ளது.

எனினும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும் புத்தாண்டு தினத்தன்று மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விலை அதிகரிப்பு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையால் சுமார் ஒரு மாத காலமாக சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு நிலவியது.

எனினும் விலை அதிகரிப்பையடுத்து எரிவாயு தட்டுப்பாடு ஓரளவிற்கு நிவர்த்தியாகும் சந்தர்ப்பத்தில், அதன் இரசாயன உள்ளடக்கத்தில் காணப்பட்ட மாற்றத்தினால் ஏற்பட்ட சர்ச்சையால் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது.

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்கள் அறிக்கைகளை வெளியிட்டாலும், பொதுமக்கள் அவற்றை பெற்றுக் கொள்வதில் பெறும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்மாடி குடியிருப்புக்களில் வசிக்கும் மக்கள் மண்ணெண்ணெய் அடுப்பினையும் உபயோகிக்க முடியாமையால் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் அதற்கான தட்டுப்பாடு காரணமாக மக்கள் மத்தியில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்தது.

எவ்வாறிருப்பினும் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ளமையால் அதனைப் பெற்றுக் கொள்வதிலும் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையிலேயே புத்தாண்டு தினமான நேற்றும் (01) இவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு நாடளாவிய ரீதியிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

இவ்வாறு வரிசையில் காத்திருந்த மக்கள், 'புத்தாண்டு பிறப்பன்று அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் காத்திருக்கச் செய்வதா சுபீட்சத்தின் நோக்கு?' 'வாக்களித்து அதன் விளைவை நாமே தேடிக் கொண்டுள்ளோம்', 'புத்தாண்டில் பாற்சோறு சமைப்பதற்கு கூட வழியில்லை' என்று விசனம் வெளியிட்டனர்.

No comments:

Post a Comment