ஐக்கிய காங்கிரசின் 17 ஆவது பேராளர் மாநாடு கல்முனையில் 17 அம்ச தீர்மானங்களுடன் நடைபெற்றது! - News View

About Us

About Us

Breaking

Saturday, January 15, 2022

ஐக்கிய காங்கிரசின் 17 ஆவது பேராளர் மாநாடு கல்முனையில் 17 அம்ச தீர்மானங்களுடன் நடைபெற்றது!

நூருள் ஹுதா உமர்

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 17ஆவது வருடாந்த பேராளர் மாநாடு அக்கட்சியின் தலைவர் கலாபூஷணம் முபாரக் அப்துல் மஜீத்தின் தலைமையில் கல்முனையில் இன்று (15) சனிக்கிழமை நடைபெற்றது.

கட்சிக்கு அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய பல்வேறு நிர்வாகிகள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதுடன், புதிய நிர்வாகிகள் பலருக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்த பேராளர் மாநாட்டில் 17 புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் இன மோதல்கள் ஏற்படாமல் தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்தும் பொதுஜன பெரமுன அரசுக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி நன்றி சொல்வதுடன் தொடர்ந்தும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பதுடன் ஐனாதிபதியின் நல்ல திட்டங்களை முன்னெடுப்பதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .

2. இனப் பிரச்சினைக்கான தீர்வாக கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்த சட்டம் தோல்வியடைந்து விட்டதால் மாகாண சபைகளை கலைத்து மாவட்ட சபைகளாக மாற்றும் 13 கொண்டு வரப்பட வேண்டும். அவற்றுக்கு பொலீஸ் அதிகாரம் தவிர்ந்த அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் .

3. அரச ஊழியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கியமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கட்சி நன்றி தெரிவிக்கிறது.

4. பாடசாலைகளில் நிலவும் சமய ஆசிரியர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். இஸ்லாம் சமய ஆசிரியர்களாக மௌலவிமார் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
5. திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் என்பது மிகப்பெரிய மாவட்டமாக இருப்பதால் தேர்தல் காலத்தில் கட்சிகளும் வேட்பாளர்களும் பொதுமக்களை சந்திப்பதில் பல கஷ்டங்களை காண்கின்றனர். ஆகவே கல்முனைத் தொகுதி, சம்மாந்துறை, பொத்துவில் ஆகியவற்றை இணைத்து கல்முனை தேர்தல் மாவட்டம் அறிவிக்கப்பட வேண்டும் .

6. கிழக்கு மாகாணத்தில் நிலவும் வீடில்லா பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் வீட்டுத் திட்டங்கள் வழங்க வேண்டும் .

7 சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாரை மாவட்ட கரையோர மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

8. முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் புதிதாக சில சரத்துக்களை கொண்டு வர முடியுமே தவிர இருக்கும் சட்டத்தில் எத்தகைய திருத்தமும் தேவையில்லை .

9. வடக்கையும் கிழக்கையும் இணைக்க எடுக்கும் எத்தகைய முயற்சியையும் எமது கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அதேபோல் வடக்கிலும் கிழக்கிலும் அரச உதவியுடன் வேறு மாகாணத்தை சேர்ந்தோர் குடியேற்றப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் .

10. பாராளுமன்ற தேர்தல்களுக்கு முன் மேலும் சில தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். அக்கரைப்பற்று, கிண்ணியா, காத்தான்குடி போன்றவை தேர்தல் தொகுதிகளாக்கப்பட வேண்டும்.

11. கொழும்பில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் வீடில்லா பிரச்சினைக்கும், ஏழமைக்கும் உடனடி தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி குழு ஒன்றை அமைக்க வேண்டும் .
12. எமது கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுளவுடன் செய்து கொண்ட பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி அரச தரப்பு கூட்டங்களில் எமது கட்சியின் ஆலோசனைகளையும் பெற வேண்டும் என கொண்டிருந்தோம் . அது இன்னமும் நடக்காதது கவலை தருகிறது. ஆகவே இது விடயத்தை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.

13. 20 க்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட முஸ்லிம் எம்பீக்கள், ஏற்கனவே அரசுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் செயற்பட்ட எமது கட்சியின் அங்கத்தவர்களுக்கும் அரசின் நலன்களை வழங்க முன்வர வேண்டும். இது விடயத்தை அரசு கவனத்தில் எடுத்து இந்த எம்பீக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் .

14. அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகள் பெற்றுள்ள பங்காளிக் கட்சிகள் அரசுடன் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும். பிரச்சினைகளை பகிரங்க வெளியில் பேசுவதை தவிர்த்து அரசுடன் சுமுகமான பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

15. பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படாத கைதிகளை விடுவிப்பதில் ஜனாதிபதி கருணை காட்ட வேண்டும் என்பதை வினயமாய் எமது கட்சி கோரிக்கை விடுக்கின்றது .

16. தேர்தல்களில் பெண்களும் போட்டியிடத்தக்க வகையில் அவர்களுக்கு 25 வீதம் ஒதுக்கியிருப்பது நல்ல விடயமாக இருப்பினும் பெண்கள் தோற்றாலும் கட்டாயம் 25 வீதமானோர் சபைக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது ஜனநாயகத்துக்கும் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களின் அபிலாஷகளுக்கும் முரண்பாடானதாகும். இதனை மாற்றி வேட்பாளர் பட்டியலில் மட்டும் 25 வீதம் பெண்களுக்கு போட்டியிட அனுமதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் வேண்டும்.

17. கௌரவ மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது கிழக்கின் திருகோணமலை மாவட்டம், மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில் பல பாலங்கள் கட்டப்பட்டன. அபிவிருத்திகள் நடந்தன. அதற்கு பின் வந்த அரசு இவை எதையும் செய்யவில்லை. அதனால் மீண்டும் கிழக்கின் பாலங்கள் புனர்நிர்மாணம் செய்யப்படுவதோடு புதிதாக பாலங்களும் போடப்பட வேண்டும். இதற்கான நிதியுதவிகளை அரபு நாடுகளிடம் பெற முடியும் என்ற ஆலோசனையையும் முன் வைக்கிறோம் என தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், நாடு பூராகவும் இருந்து வருகை தந்த பேராளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment