ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம் : அரசிலிருந்து வெளியேறும் எண்ணம் எமக்கு இல்லை - அமைச்சர் வாசுதேவ - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம் : அரசிலிருந்து வெளியேறும் எண்ணம் எமக்கு இல்லை - அமைச்சர் வாசுதேவ

தாமோ அமைச்சர்களான விமல் வீரவன்ச அல்லது உதய கம்மன்பிலவோ அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு எந்த தீர்மானமும் கிடையாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமைக்கு பகிரங்கமாக எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளோம்.

எமது தீர்மானம் அமைச்சரவை கூட்டுப் பொறுப்பிற்கு முரண் என பல்வேறு தரப்பினர் பல கருத்துக்களை தற்போது முன்வைக்கிறார்கள்.

அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சு பதவிகளை துறக்கலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.

நாம் மூவரும் அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதாக விரும்பினால் அவர்கள் பதவி விலகலாம். பதவி விலகுமாறு ஒருபோதும் குறிப்பிடப் போவதில்லை. அரசாங்கம் என்ற ரீதியில் மாற்று கருத்துக்கள் பல காணப்படலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனை ஊடகங்கள் முன்னிலைப்படுத்தவில்லை.

அந்த வகையில் நாமும் அவருக்கு மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்வது நாமும் அவரை விட்டு வெளியே செல்லும் தீர்மானம் கிடையாது என்பதே. நாம் ஜனாதிபதியுடன் இணைந்து இந்த பயணத்ததை முன்னெடுத்துச் செல்வதே எமது நோக்கமாகும்.

மக்களாணைக்கமைய ஆட்சியதிகாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம். என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

எனினும் எமது நாட்டுக்கு எதிர்காலத்தில் பாதிப்பையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் தெரிவித்துள்ளோம்.

அமைச்சரவையில் கூட்டுப் பொறுப்பு இருப்பதை நாம் அறிவோம். ஏதாவது தீர்மானங்கள் எடுக்கும் போது நாம் அதற்கு இணக்கம் தெரிவித்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். அது இங்கிலாந்தின் கொள்கையாகும். அதற்கு முந்திய கொள்கையும் எமக்கு உண்டு.

அந்த வகையில் நாட்டுக்கு நன்மை பயக்கும் விடயங்களில் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்.

எவ்வாறாயினும் அமைச்சர்கள் ஆகிய எம் மூவருக்கும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் எந்த தீர்மானமும் கிடையாது.

அத்தகைய கருத்து முன்வைக்கப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நாம் உருவாக்கிய அரசாங்கத்தில் இருந்து நாம் ஏன் வெளியேற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தீர்மானங்கள் அனைத்தும் சரியானதாக அமையும் என கருத முடியாது. பேச்சுவார்த்தை, மாநாடு ஊடாக தவறுகளை திருத்திக் கொள்ள முடியும். யுகதனவி விவகாரத்திலும் முரன்பாடற்ற தீர்வினை பெற்றுக் கொள்ளவே எதிர்பார்க்கிறோம்.

பாரிய போராட்டத்திற்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளோம். நாம் தோற்றுவித்த அரசாங்கத்தில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டிய அவசியம் கிடையாது என்றார்.

No comments:

Post a Comment