(ஆர்.யசி)
இதுவரை காலமாக தமிழர்களின் நலன்களில், அரசியல் தீர்வு விடயங்களில் அக்கறை செலுத்தாத சீனா தற்போது வடக்கில் கவனம் செலுத்த வேண்டிய தேவை என்னவென கேள்வி எழுப்புவதாகவும், இந்தியாவை விடுத்து சீனாவுடன் நட்புறவை கையாள்வது எமக்கு பாதகமாக அமையும் எனவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த வாரம் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த சீனத் தூதுவர் கீ சென் ஹொங் வடக்கில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் தமிழர் அரசியல் தரப்பு இதனை விமர்சித்துள்ளது.
இந்நிலையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போதைய நிலைமையில் சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் குறித்து எம்மத்தியில் பல கேள்விகள் எழுகின்றன. இதுவரை காலமாக சீனாவினால் எந்தவித ஒத்துழைப்புகளும் எமக்கு கிடைத்திருக்காத நிலையிலும், எமது அரசியல் பிரச்சினைகள் குறித்து இதுவரை காலமாக சீனா கவனம் செலுத்தாத நிலையிலும் தற்போது உடனடியாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர், வேட்டி கட்டிக் கொண்டு நல்லூர் கோவிலுக்குச் செல்வதும், எமது மீனவர்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுப்பதும் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையில் சில பிணக்குகள் இருக்கின்ற காரணத்தினால், இவ்வாறான ஒரு சூழலில் தமிழ் மக்களை ஈர்க்கும் விதமாக சீனாவின் நகர்வு அமைந்துள்ளது அல்லது இந்தியாவின் செயற்பாடுகளை கருத்தில் கொண்டும் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள சீனாவுக்கு வடக்கில் காலடி எடுத்து வைக்க வேண்டிய தேவை உள்ளது என்றே கருதுகின்றோம்.
இந்திய - சீன முரண்பாடுகளில் எம்மை பகடைக்காய்களாக மாற்றிக் கொள்ளக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். எம்மை பொறுத்த வரையில் தமிழ் மக்களுடன் இந்தியா மிக நெருக்கமாக செயற்பட்டு வருகின்றது.
எமது உள்ளக விவகாரங்களில் அவர்களின் ஆர்வமும் தலையீடும் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் நாம் இந்தியாவை விடுத்து சீனாவுடன் நட்புறவை கையாள்வது எமக்கு பாதகமாக அமையும்.
மேலும், சீனா எமது மக்களுக்கு உதவிகளை செய்கின்றது, மீனவர்களுக்கு உதவிகளை செய்கின்றது என்பதற்காக இந்தியாவை நாம் புறக்கணிக்க முடியாது. அதேவேளையில் இந்தியா இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எவ்வாறு இருப்பினும் சர்வதேச பிரச்சினைகளில் தமிழ் மக்களை உள்நுழைத்துவிட்டு இறுதியாக எம்மை பகடைக்காய்களாக மாற்றிவிடக்கூடாது எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment