நாடு தற்போது பாரிய நிதிநெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதிலிருந்து மீள்வதற்கு வரையறுக்கப்பட்ட தெரிவுகளே காணப்படுகின்றன. எனவே எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதா, இல்லையா என்பது குறித்து விசேடமாக ஆராயப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதில் அமைச்சர்களுடன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரும் கலந்துகொள்வர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் ஆளுந்தரப்பின் ஏனைய உறுப்பினர்கள் சிலரால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.
சர்வதேச நிதியத்தை நாடுவதில் எவ்வித தவறுமில்லை. நிதியுதவிக்காக இத்தகைய கட்டமைப்புக்களை நாடும்போது வரையறுக்கப்பட்டளவிலான நிதி மற்றும் நாணயக் கொள்கைசார் நிபந்தனைகளுடனேயே அவை நிதியுதவிகளை வழங்கும். ஆனால் அவை நாட்டின் சுயாதீனத் தன்மையிலும் இறையாண்மையிலும் மேற்கொள்ளப்படும் தலையீடுகளாக சிலரால் நோக்கப்படுகின்றன.
இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை என்று அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment