(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கடந்த கலாத்தில் எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்யாத காரணத்தினால் இறுதி பத்து மாதங்களில் மாத்திரம் 7000 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. எனவே எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, வாய்மூல விடைகளுக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 52 ஆண்டுகள் பழைமையானது. இதனை யாருக்கும் விற்க நாம் தீர்மானிக்கவும் இல்லை, அவ்வாறு விற்பதற்காக கேள்வி எழுமென நினைக்கவும் இல்லை.
உலகின் தற்போதைய தொழிநுட்பத்துடன் ஒப்பிடும் வேளையில் இது 52 ஆண்டுகள் பழைமையான தொழிநுட்ப முறைமையுடன் இயங்குகின்ற காரணத்தினால் இதனை கொண்டு நடத்துவதே கடினமாக உள்ளது.
ஆகவே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை விற்க எந்த நோக்கமும் எமக்கு இல்லை. எவ்வாறு இருப்பினும் 50 நாட்களுக்கு இந்த நிலையத்தை மூடவே தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் மீண்டும் இயக்கத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றோம்.
அதேபோல் எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம், கடந்த கலாத்தில் இதில் மாற்றங்களை செய்யாத காரணத்தினால் இறுதி பத்து மாதங்களில் மாத்திரம் 7000 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே ஒன்றில் விலை மாற்றம் ஏற்பட வேண்டும். இல்லையேல் திறைசேரியின் மூலமாக நிவாரணம் வழங்க வேண்டும் என நிதி அமைச்சரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளோம்.
கடந்த ஆறு மாதங்களில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யாத உலகில் ஒரே நாடு இலங்கை என்பதையும் சபைக்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.
No comments:
Post a Comment