(எம்.மனோசித்ரா)
அநாவசிய பொதுமக்கள் ஒன்று கூடல்களுடன் பண்டிகைகளை கொண்டாடுவதற்கு முயற்சித்தால், 2022 ஆம் ஆண்டையும் கொவிட் பரவலுடனேயே கடக்க வேண்டியேற்படும். காரணம் தற்போது ஊடகங்களில் வெளியிடப்படும் எண்ணிக்கையை விட சமூகத்தில் அதிக தொற்றாளர்கள் காணப்படுகின்றனர் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எவ்வகையான சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும், பல சந்தர்ப்பங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்பட்ட நிலைமையை மீண்டும் உருவாகும் வகையிலேயே பொதுமக்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
தற்போதைய பண்டிகைக் காலத்தையும் மக்கள் பழைய முறைப்படியே கொண்டாடுவதற்கு முயற்சிக்கின்றனர். தற்போதும் நாமும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளோம். சமூகத்தில் பல பகுதிகளிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
நாளாந்தம் ஊடகங்களில் வெளியிடப்படும் தரவுகளை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டு, நிலைமை மோசமடையவில்லை என்று கற்பனை செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம். காரணம் அதனை விட மோசமான நிலைமை சமூகத்தில் காணப்படுகிறது.
அநாவசிய பொதுமக்கள் ஒன்று கூடல்களுடன் பண்டிகைகளை கொண்டாடுவதற்கு முயற்சித்தால் , 2022 ஆம் ஆண்டையும் கொவிட் பரவலுடனேயே கடக்க வேண்டியேற்படும்.
எனவே அரசாங்கத்தினால் அல்லது சுகாதார தரப்பினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், விதிக்கப்படாவிட்டாலும் மக்கள் சுய கட்டுப்பாடுகளை விதித்து செயற்பட வேண்டும்.
அவ்வாறில்லை என்றால் பண்டிகைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களில் அல்லது கொவிட் சிகிச்சை நிலையங்களிலேயே கொண்டாட வேண்டியேற்படும் என்றார்.
No comments:
Post a Comment