நோய் என்பது இனம், மதம், பிரதேசம் பார்த்து வரும் ஒன்றல்ல : தேசிய சுகாதார வேலைத்திட்டத்தை முழுமையாக மலையகத்திற்கும் வழங்குங்கள் - வடிவேல் சுரேஷ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

நோய் என்பது இனம், மதம், பிரதேசம் பார்த்து வரும் ஒன்றல்ல : தேசிய சுகாதார வேலைத்திட்டத்தை முழுமையாக மலையகத்திற்கும் வழங்குங்கள் - வடிவேல் சுரேஷ்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் சுகாதார சேவையை தேசிய வேலைத்திட்டமாக மாற்றி எமது பெருந்தோட்ட மக்களுக்கான முழுமையான சுகாதார சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், எமது பகுதியில் தமிழ் பேசும் தாதியர், வைத்தியர்களை இணைத்து எமது மக்களுக்கு சேவை செய்ய இடமளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (30 ) இடம்பெற்ற சுகாதாரத்துறை அமைச்சு மற்றும் மூன்று இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் சுகாதார சேவையில் ஒரு தேசிய கொள்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது நாட்டில் சகல தரப்பினருக்கும் ஒரே விதமாக செயற்படவும் வேண்டும். ஆனால் மலையகத்தில் அவ்வாறான நிலைமை காணப்படுவதில்லை.

இலவச சுகாதார சேவை மலையக மக்களை சென்றடைவதில் பாரிய குறைபாடு காணப்படுகின்றது. மலையகத்தில் காணப்படும் 543 வைத்தியசாலைகளையும் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்து தகுதியாக வைத்தியர்களை அதுவும் தமிழ் பேசும் வைத்தியர்களை நியமிக்க வேண்டும் என்ற தீர்மானம் இருந்தும் அது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பெருந்தோட்ட வைத்தியசாலைகளை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் பெற்றும் இன்னமும் அவை முன்னெடுக்கப்படாது இடை நிறுத்தப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன? கொவிட் வைரஸ் பரவல் காலங்களில் கூட இதனால் முழுமையான பலன் கிடைக்கவில்லை.

எனினும் 1990 சேவை மிகப்பெரியது. அதனை நாம் மறுக்கவும் இல்லை. ஆனால் சுகாதார அமைச்சின் கீழ் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் இயங்காதமை ஏன் என்ற கேள்வியே எழுகின்றது. பதுளை மாவட்டத்திலும், நுவரெலியா மாவட்டத்திலும் பல வைத்தியசாலைகள் செயற்படாது கைவிடப்பட்டுள்ளன.

நோய் என்பது இனம், மதம், பிரதேசம் பார்த்து வரும் ஒன்றல்ல. எனவே தேசிய சுகாதார வேலைத்திட்டத்தை முழுமையாக மலையகத்திற்கும் வழங்க வேண்டும். இதில் பாகுபாடு காட்டக்கூடாது. எமது மக்கள் பாரிய அசம்பாவிதங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவே மனிதாபிமான ரீதியில் தேசிய சுகாதார சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இன்று அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது, எரிவாயு சிலிண்டர்கள் எப்போது வெடிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு மத்தியில் சுகாதார மருத்துவ சேவையையும் மட்டுப்படுத்த வேண்டாம். மொழியை, இனத்தை வைத்து எம்மை மட்டுப்படுத்த வேண்டாம். எமது பகுதியில் தமிழ் பேசும் தாதியர், வைத்தியர்களை இணைத்து எமது மக்களுக்கு சேவை செய்ய இடமளிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment