தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களுடன் மாத்திரமே அரிசி, சீனி விற்பனை செய்யப்படும் : பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது என்கிறார் அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களுடன் மாத்திரமே அரிசி, சீனி விற்பனை செய்யப்படும் : பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது என்கிறார் அமைச்சர் பந்துல

(இராஜதரை ஹஷான்)

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் விலை நிலையாக பேணும் வரைக்கும் மட்டுப்படுத்தாத அளவிற்கு அரிசி இறக்குமதி செய்யப்படும். டொலர் உள்நாட்டில் அச்சிடப்படவில்லை. ஆகவே இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடைந்துள்ளன என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நுகர்வோர் லங்கா சதொச விற்பனை நிலையத்தில் அரிசி, சீனி ஆகிய பொருட்களை மாத்திரம் பெற முடியாது. தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களுடன் மாத்திரம் அரிசி, சீனி விற்பனை செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.

வர்த்தகத்துறை அமைச்சில் புதன்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடுப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய உற்பத்திகளை வலுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பல திட்டங்களை வகுத்துள்ளது. இதன் காரணமாக பல சவால்கள் ஏற்பட்டுள்ளன. அரிசி உற்பத்தியில் தன்னிறைவடைய வேண்டும் என்பதற்காக அரிசி இறக்குமதி செய்யப்படுவது ஆரம்பத்தில் இடைநிறுத்தப்பட்டது.

அரிசி இறக்குமதிக்காக மாத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான நிதி செலவிட வேண்டியுள்ளது. 2014ஆம் ஆண்டு 6 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்வதற்காக 282 மில்லியனும், 2015ஆம் ஆண்டு மெற்றிக் தொன் அரிசி இறக்குமதிக்காக 135 மில்லியனும், 2017ஆம் ஆண்டு 7 இலட்சத்து 45 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதிக்காக 301 மில்லியனும், 2020ஆம் ஆண்டு11 மில்லியன் நிதியும் செலவிடப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் அரிசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக செயற்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்காத காரணத்தினால் மீண்டும் அரிசி இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும். அரிசியின் விலை நிலையாக பேணும் வரையில் எல்லையற்ற வகையில் அரிசி இறக்குமதி செய்து 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் விநியோகிப்பேம்.

லங்கா சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக அரிசி குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படும். நுகர்வோர் ஒருவர் 5 கிலோ கிராம் நாடு வகை அரிசியை 99 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள முடியும்.

தனியார் துறையினர் அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2 வார காலத்திற்குள் அரிசியின் விலை குறைவடையும்,

லங்கா சதொன விற்பனை நிலையத்தின் ஊடாக வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 122 ரூபாவிற்கும், சிவப்பு சீனி 125 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.

ஒருவருக்கு 5 கிலோவிற்கு அதிகமாக சீனி வழங்கப்படமாட்டாது. மஞ்சள், பருப்பு, தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பயறு ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் லங்கா சதொச விற்பனை நிலையத்தில் அரிசி, சீனி ஆகியவற்றை மாத்திரம் கொள்வனவு செய்ய முடியாது. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் கொள்வனவு செய்ய வேண்டும். நட்டத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களுக்கு நிவாரண விலையில் பொருட்களை சதொச ஊடாக விநியோகிக்கிறோம்.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதில் டொலர் பிரச்சினை காணப்படுகிறது. நாட்டுக்குள் டொலர் உள்வரும் பிரதான துறையான சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆகவே இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் டொலர் தேசிய மட்டத்தில் அச்சிடப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment