உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான உரிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட 855 குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (26) மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றில், நீதியரசர்களான நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெந்திகே, மொஹமட் இர்ஷதீன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே எதிர்வரும் திங்கட்கிழமை (29) நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
தற்போதைய பொலிஸ் மாஅதிபரை அடுத்த வழக்கு தினத்தில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு, முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையாகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
குறித்த கோரிக்கையை ஏற்ற நீதியரசர்கள் குழாம், தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவை எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வௌியிடுமாறு உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment