மின்சாரத்துறை தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக ஊடகங்கள் மூலம் மட்டுமே தெரிவித்து வருகின்றனர். அவர்கள் இதுவரை மின்சார சபைக்கு அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுமில்லை பேச்சுவார்த்தையை கோரவும் இல்லை என மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்தார்.
அது தொடர்பில் மின்சார சபையின் தலைவரையோ அல்லது பொது முகாமையாளரான என்னையோ உயர் அதிகாரிகளையோ சந்தித்து இதுவரை எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்தவுமில்லை.
நாட்டுக்கு துரோகமிழைக்கப்படுகின்றது. நாட்டை விற்கப் போகிறார்கள் என்றெல்லாம் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அது தொடர்பான தெளிவைப் பெற்றுக் கொள்ள சம்பந்தப்பட்ட எம்முடன் அது தொடர்பில் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான பேச்சுவார்த்தைகளை நடத்த அவர்கள் முன்வருவார்களானால் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறெனினும் மின் துண்டிப்பு இடம்பெறும் வகையில் அவர்கள் செயற்பட மாட்டார்கள் என்பதே எமது நம்பிக்கை. ஏனெனில் அவ்வாறு மின் துண்டிப்பு ஏற்பட்டால் மின்சார சபை ஊழியர்களின் குடும்பங்களும் இருளிலேயே இருக்க வேண்டும் என்பதை அவர்கள் சிந்திக்காமல் இருக்க மாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் சூம் தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற ஜனாதிபதி ஊடக மையத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment