நடுக்கடலில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் உயிரிழந்ததாக கூறப்படும் மீனவர் ராஜ்கிரணின் உடலை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என அவரது மனைவி பிருந்தா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் இன்று மனு அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த மாதம் 18ஆம் திகதி சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் ஆகியோர் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் இலங்கை கடற் பரப்பிற்குள் மீன் பிடித்தால் அவர்களை கைது செய்ய முற்பட்ட போது விசைப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மீன்பிடி படகு நடுக்கடலில் மூழ்கியது என்று மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
படகில் இருந்த சுகந்தன் மற்றும் சேவியர் இருவரையும் உயிருடன் மீட்ட இலங்கை கடற்படையினர் ராஜ்கிரண் உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. பின்னர் ராஜ்கிரணின் உடல் இலங்கை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இந்திய தூதரகத்தின் மூலம் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் கோட்டைப்பட்டிணத்தில் உள்ள உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மயானத்தில் புதைக்கப்பட்டது. முன்னதாக ராஜ்கிரண் உடலை பார்க்க வேண்டும் என உறவினர்கள் கேட்டனர் ஆனால் உடல் கடலில் இருந்து எடுக்கப்பட்டதால் உடல் மிகவும் மோசமாக உள்ளது எனவே உடலை பெட்டியில் இருந்து திறந்து காட்ட முடியாது என அரசு அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று மீனவர் ராஜ்கிரண் மனைவி பிருந்தா மற்றும் சமூக அமைப்புகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்து தனது கணவர் உடலை தன்னிடம் காண்பிக்காமல் புதைத்து விட்டனர். எனது கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளது எனவே புதைத்த உடலை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என மனு அளித்தார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பிருந்தா, எனது கணவரின் உடலை என்னிடம் காண்பிக்கவில்லை. அது எனது கணவரின் உடல்தானா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. எனவே புதைத்த உடலை தோண்டி எடுத்து மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
எனது கணவரை கடலில் இருந்து மீட்டதாக இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள புகைப்படத்தில் எனது கணவரை இலங்கை கடற்படையினர் அடித்து துன்புறுத்தி துப்பாக்கியால் சுட்டதைப் போல் இருந்தது. கடலில் மூழ்கி இறந்தவர்கள் படம் இது போல் இருக்காது என்றார்.
இது குறித்து மதுரையை சேர்ந்த பிருந்தாவின் வழக்கறிஞர் பாண்டியராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், மீனவர் ராஜ்கிரண் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்திய மீனவர் கொல்லப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை எனவே உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார்.
மேலும் ராஜ்கிரண் உடலின் புகைப்படத்தை பார்க்கும் பொழுது அவர் அடித்துக் கொல்லப்பட்டது போல் உள்ளது. ஆகவே இந்திய குற்றவியல் சட்டத்தின் படி மூன்று மருத்துவர்களை வைத்து மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என வழக்கறிஞர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment