வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் நுகர்வோர் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை - நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 14, 2021

வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் நுகர்வோர் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை - நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம்

(எம்.மனோசித்ரா)

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படாததன் ஊடாக, இந்த அரசாங்கம் நுகர்வோர் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாகிறது. வியாபாரிகளால் நாளாந்தம் நுகர்வோர் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறான மோசடி வியாபாரிகளிடமிருந்து நுகர்வோரை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காத நிதி அமைச்சர் தொடர்பில் அதிருப்தியை வெளியிடுவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாளுக்குநாள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தமக்கு சலுகைகள் கிடைக்கப் பெறும் என்று நுகர்வோர் எதிர்பார்ப்புடன் காத்திருந்த போதிலும், அந்த எதிர்ப்பார்ப்புக்களை சிதைக்கும் வகையிலேயே வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படாததன் ஊடாக, இந்த அரசாங்கம் நுகர்வோர் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாகிறது.

சீனி, அரிசி, சீமெந்து மற்றும் வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு சந்தைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை.

இதனூடாக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வரி அறவீடு அதிகரிக்கப்பட்டு, மீண்டும் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பதும் தெளிவாகிறது.

எவ்வாறிருப்பினும் சூதாட்டம் மற்றும் பந்தய வரிகள் அதிகரிக்கப்படாமலுள்ளதன் மூலம், அரசாங்கம் இவற்றை ஊக்குவித்துள்ளமையும் தெளிவாகிறது.

விபத்துக்கள் ஏற்படும்போது அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரித்துள்ளமையானது, விழுந்த மனிதனை காலால் மிதிப்பதைப் போன்றதாகும்.

2022 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டமானது நுகர்வோருக்கு எவ்வித சலுகைகளையும் வழங்காதவொன்றாகும் என்று தெரிவித்துக் கொள்வதோடு, அது வானளாவிய கட்டிடமாகவே உள்ளது. அது பலத்த சத்தத்துடன் வெடித்தது. ஆனால் இறுதியில் கோடு மட்டுமே எஞ்சியிருந்தது.

No comments:

Post a Comment