நல்லூர் - சங்கிலியன் பூங்கா நிகழ்வு குறித்து தவறான பரப்புரை - விளக்கமளித்துள்ள யாழ். இந்திய கொன்சுலேட் ஜெனரல் காரியாலயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 24, 2021

நல்லூர் - சங்கிலியன் பூங்கா நிகழ்வு குறித்து தவறான பரப்புரை - விளக்கமளித்துள்ள யாழ். இந்திய கொன்சுலேட் ஜெனரல் காரியாலயம்

(எம்.மனோசித்ரா)

யாழ்ப்பாணம் - நல்லூரிலுள்ள சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்பில் தவறான ஊடக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

கொன்சூல் ஜெனரலுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாதமையால் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுடனோ உத்தியோகபூர்வ நிகழ்வுக்கு அப்பால் அவர்களின் செயற்பாடுகளுடனோ எந்தவிதத்திலும் இணைத்துப் பார்க்க முடியாது என்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட கொன்சூல் ஜெனரல் விடுதலைப் புலிகளுக்கு மரியாதை செலுத்தியதாக சில ஊடங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இது தொடர்பில் விளக்கமளித்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் காரியாலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சூல் ஜெனரல் கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற பசுமைக் கண்காட்சி ஒன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு மரக் கன்றுகளை வழங்கியமை தொடர்பாக தவறான ஊடக அறிக்கைகள் வெளியாகியுள்ளதை நாம் காண்கின்றோம்.

அழைப்பின் பிரகாரமே அவர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். மேலும் அவருக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாதமையால் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுடனோ உத்தியோகபூர்வ நிகழ்வுக்கு அப்பால் அவர்களின் செயற்பாடுகளுடனோ எந்தவிதத்திலும் இணைத்துப்பார்க்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment