கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமையை கொவிட் ஒழிந்து விட்டதாக கருதக் கூடாது : மக்களை எச்சரிக்கிறார் இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமையை கொவிட் ஒழிந்து விட்டதாக கருதக் கூடாது : மக்களை எச்சரிக்கிறார் இராணுவத் தளபதி

(எம்.மனோசித்ரா)

நாட்டு மக்களின் நன்மை கருதியே சலுகையாக சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என்பதற்காக கொவிட் தொற்று நாட்டிலிருந்து நீங்கியுள்ளது என்று அர்த்தமல்ல. கொவிட் தொற்றாளர்கள் தொடர்ந்தும் இனங்காணப்படுவதால் நாட்டு மக்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அறிவுடன் செயற்பட வேண்டும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை இராணுவத்தினருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகளை கண்காணித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இராணுவம் உள்ளிட்ட முப்படையினர், சுகாதார தரப்பினர் மற்றும் விமான நிலைய, சுற்றுலாத்துறை ஊழியர்களுக்கு முன்னுரிமையளித்து மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோர், பின்னர் 30 வயதுக்கு மேற்பட்டோர் என அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.

நாட்டில் தற்போது நாளாந்தம் 500 - 600 க்கு இடைப்பட்டளவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு, 15 - 20 க்கு இடைப்பட்ட எண்ணிக்கையில் மரணங்களும் பதிவாகிக் கொண்டிருக்கிறது. அத்தோடு 14,000 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். மக்களின் அர்ப்பணிப்பின் காரணமாகவே இந்த நிலைமையையாவது அடைய முடிந்தது.

பெருமளவானோருக்கு முதற்கட்ட தடுப்பூசியேனும் வழங்கப்பட்டுள்ள பின்னணியில் நாட்டு மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கும் வாய்ப்புள்ளது. பல மாதங்களின் பின்னர் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

அத்தோடு நாட்டு மக்களின் நன்மை கருதி சலுகையாக சில கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என்பதற்காக கொவிட் தொற்று நாட்டிலிருந்து நீங்கியுள்ளது என்று அர்த்தமல்ல. கொவிட் தொற்றாளர்கள் தொடர்ந்தும் இனங்காணப்படுவதால் நாட்டு மக்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அறிவுடன் செயற்பட வேண்டும்.

தற்போதும் சில புதிய பிறழ்வுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னரும் இலங்கைக்குள் பல பிறழ்வுகள் நுழைந்துள்ளன. எனவே இனிவரும் காலங்களில் அவற்றைப் போன்று புதிய பிறழ்வுகள் நுழைவதை தடுப்பதோடு, நாட்டுக்குள்ளும் அனைவரும் பாதுகாப்பாக செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment