கற்பிட்டியில் உள்ள 12 தீவுகளை சுற்றுலாவுக்குப் பயன்படுத்தும் உடனடி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும் : கோப் குழுவினால் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்குத் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

கற்பிட்டியில் உள்ள 12 தீவுகளை சுற்றுலாவுக்குப் பயன்படுத்தும் உடனடி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும் : கோப் குழுவினால் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்குத் தெரிவிப்பு

கற்பிட்டியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 12 தீவுகளை சுற்றுலா கைத்தொழிலுக்குப் பயன்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டத்தை விரைவில் தயாரிக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குத் தெரிவித்தார்.

2055 ஏக்கரைக் கொண்ட 12 தீவுகளில் 5 தீவுகளுக்காக 2011ஆம் ஆண்டு முதலீடு செய்ய முன்வந்தபோதும் நீர் பங்களா திட்டத்துக்கு (Water Bungalows) அனுமதி பெற்றுக் கொள்ள உரிய நிறுவனத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியாததால் இது காலதாமதமடைந்துள்ளது என்பது இங்கு தெரியவந்தது. 

மாலைதீவில் இந்த வகையிலான ஹோட்டல்களைக் கொண்டுள்ள இந்த முதலீட்டாளருக்கு அனுமதியை வழங்காது 10 வருடங்கள் காலதாமதம் ஆகியிருப்பது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் தடையாக இருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அழகிய தீவை சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து கோப் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். 

இதற்காக ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருப்பதாகவும், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, வடமேல் மாகாண சபை, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம் போன்ற சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வழிநடத்தல் குழுவொன்றை அமைத்து பலமான சட்டக் கட்டமைப்பின் கீழ் விசேட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமாலி பெர்னாந்து ஆகியோருக்கு கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் அண்மையில் (26) நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் புலப்பட்டன.

அத்துடன், சில வருடங்களுக்கு முன்னர் கதிர்காமம் சுற்றுலா விடுதியைப் புனரமைப்பதற்காக செலவு செய்யப்பட்ட 29 மில்லியன் ரூபாவில் 11 மில்லியன் ரூபா செய்யாத வேலைக்காக கொடுக்கப்பட்டமை குறித்த கணக்காய்வின் அவதானம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. மீண்டும் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் ஊடாக இந்த 11 மில்லியன் ரூபாவின் பெறுமதி 4.8 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இருந்தபோதும் இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது. 

மாறாக, சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு எச்சரிக்கைக் கடிதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் வெளிப்படுத்தியதோடு, இது தொடர்பில் குழு கடும் அதிருப்தியை வெளியிட்டது. இது தற்போதுள்ள நிர்வாகத்தின் மீதான விமர்சனம் அல்ல என்றும், நீண்டகாலமாக இருக்கும் இந்த முறையை மாற்றி, கணக்காய்வின் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்க நிறுவனங்களின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கல்பிட்டிய தோரையடி ஜெட்டி மற்றும் வன்னிமுந்தலம் களப்பு ஆகியவற்றை அண்மித்த பகுதியில் வீதியமைப்பதற்காக மேலதிகமாக 10 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. 

இது தொடர்பில் புத்தளம் மாவட்ட பொறியியலாளரிடம் வினவியபோது உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை பதிலளித்தது. 

இது தொடர்பில் ஆராய்வதற்காக 2016 ஆம் ஆண்டு கோப் குழு பரிந்துரையொன்றை முன்வைத்திருந்தபோதும், 2018 ஆம் ஆண்டிலேயே விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார். 

இது தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய கோப் தலைவர், நாட்டின் நிதிக் கட்டுப்பாடு பாராளுமன்றத்திடமிருக்கும் நிலையில் அதனால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள் கட்டுப்பட்டிருப்பதால், உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார்.

2018-2019 ஆம் ஆண்டில் சுற்றுலா அபிவிருத்திக்காக 1.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாந்து தெரிவித்தார். 

அதன்படி தற்போது சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக தனித்தனியாக செயற்படும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் இலங்கை மாநாட்டு பணியகம் ஆகியவற்றை இணைத்து தனியான நிறுவனமொன்றை உருவாக்கவிருப்பதாகவும், ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை தனியாக செயற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான புதிய சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் மார்ச் - ஏப்ரல் மாதத்திற்குள் இதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். மேலும் வினைத்திறன் மிக்க பொறிமுறை தேவையென்றால், அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் நிறுவனங்களின் பணிகளை துரிதப்படுத்துமாறு கோப் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

மாலைதீவு தற்போது சுற்றுலாத்துறையில் விரைவான வளர்ச்சியை அனுபவித்து வரும் நிலையில் இந்நிலைக்கு இலங்கை செல்வதில் காணப்படும் தடைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 

இங்கு கிமாலி பெர்னாந்து கருத்துத் தெரிவிக்கையில், மாலைதீவு சுற்றுலாத்துறையில் அதிக விலையுள்ள சொகுசு ஹோட்டல்கள் மட்டுமே செயலில் உள்ளமை, உளகளாவிய ரீதியில் காணப்படும் தொடர்புகள் மூலம் ஊக்குவிப்புக்களை மேற்கொள்ளல், சர்வதேச மட்டத்தில் 15 விசேட நிபுணர்களைக் கொண்ட சிறிய குழுவின் ஊடாக இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை, முன்னணி சர்வதேச முதலீட்டாளர்களைக் கொண்டு வருதல் போன்ற விடயங்களின் ஊடாக இத்துறையில் அவர்களால் முன்னேற்றம் காண முடிந்துள்ளது என்றார். 

கொவிட் தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இந்த நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது என்றும் தலைவர் தெரிவித்தார்.கொவிட் நிலையில் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில் தமது நிறுவனம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், தற்போது ஒன்லைனில் பதிவு செய்யும் செயல்முறையை முழுமையாகப் பூர்த்திசெய்ய முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக பல பிரதேசங்களில் காணிகள் உட்பட சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழு வலியுறுத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஜகத் புஷ்பகுமார, நளின் பண்டார, எஸ்.எம்.மரிக்கார், மதுர விதானகே, பிரேம்நாத் சி.தொலவத்த மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment