(இராஜதுரை ஹஷான்)
திருகோணமலை கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து சம்பவத்திற்கு 2009ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சியில் இருந்த அரச தலைவர்களும், அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும் துயரசம்பவத்திற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளமை பல விடயங்களை உணர்த்தியுள்ளது இந்த துயர சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் புரியது முற்றிலும் தவறானது.
துயரசம்பவத்திற்கு 2009ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த அரச தலைவர்களும், அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும். அபிவிருத்தியால் முன்னேற்றமடைகிறோம் என பெருமைப்பட்டுக் கொள்ளும் தருணத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் நடுத்தர மக்கள் பெரும் போராட்டங்களை எதிர்கொள்வது முற்றிலும் வேதனைக்குரியது.
குறிஞ்சாக்கேணி சம்பவத்திற்கு அரசியல்வாதி என்ற ரீதியிலும், நாட்டு பிரஜை என்ற ரீதியிலும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
வெளிநாட்டு கடன்களை பெற்று அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதால் எவ்வித பயனும் மக்களுக்கு கிடைக்கப் பெறாது. பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் சுமை மக்கள் மீதே சுமத்தப்படும். தேசிய வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
சிறையில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் மூன்று முறை உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை முன்வைத்தார் இருப்பினும் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி இதுவரை உரிய கவனம் செலுத்தவில்லை.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஏன் சிறையில் உள்ளார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே அவரது விடுதலைக்காக 10 இலட்சம் கையொப்பத்தை மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment