சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது 'சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விவகாரம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது 'சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விவகாரம்

(நா.தனுஜா)

'சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் முதற்கட்ட விசாரணைகள் நாளைமறுதினம் செவ்வாய்கிழமை (2) ஆரம்பமாகின்றன.

சர்வதேச ரீதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டும் நோக்கில், வரையறுக்கப்படாத சுதந்திர ஊடகம் (Free Press Unlimited), எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு (Committee to Protect Journalists) ஆகிய மூன்று சர்வதேச அமைப்புக்கள் இணைந்து கடந்த செப்டெம்பர் மாதம் 'ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம்' என்ற கட்டமைப்பை ஸ்தாபித்தன.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவை தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதுடன் அவர்களுடைய கதைகளைக் கேட்டறிந்து பதிவு செய்தல் ஆகியவற்றின் ஊடாக குற்றமிழைத்த அரசாங்கங்களை சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகப் பொறுப்புக்கூறச் செய்தல் ஆகியவையே இந்த மக்கள் தீர்ப்பாயத்தின் பணிகளாக அமையும் என்று அவ்வமைப்புக்கள் விளக்கமளித்திருந்தன.

அதன் பிரகாரம் முதலில் ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, மிக்குவேல் ஏஞ்சல் லோபேஸ் வெலஸ்கோ மற்றும் நபீல் அல்-ஷர்பாஜி ஆகியோரின் படுகொலைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்குத் தவறியமைக்காக இலங்கை, மெக்சிகோ மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் மீது ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் குற்றம் சுமத்தியிருந்ததுடன் இச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப் போவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நடைபெறவிருப்பதுடன் மனித உரிமைகள் குறித்த பிரபல வழக்கறிஞரான அல்முடெனா பெர்னாபேயூ இந்த முதற்கட்ட வழக்கு விசாரணைகளை வழிநடத்தவுள்ளார்.

அதுமாத்திரமன்றி ஊடக சுதந்திரம் தொடர்பான சட்டவல்லுனர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவின் உறுப்பினரான பாரோனெஸ் ஹெலெனா கென்னடி இதன்போது விசேட உரையொன்றையும் நிகழ்த்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இது குறித்து எழக்கூடிய சந்தேகங்களுக்கான தெளிவுபடுத்தல்களை வழங்கும் நோக்கில் நாளையதினம் திங்கட்கிழமை (1) சர்வதேச ரீதியிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் நிகழ்நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment