நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் கிடையாது : அநாவசியமாக யாரும் கலவரமடையத் தேவையில்லை என்கிறார் அமைச்சர் கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Friday, October 22, 2021

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் கிடையாது : அநாவசியமாக யாரும் கலவரமடையத் தேவையில்லை என்கிறார் அமைச்சர் கம்மன்பில

எம்.மனோசித்ரா

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் கிடையாது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். அநாவசியமாக யாரும் கலவரமடையத் தேவையில்லை. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை எதிர்கட்சியினரால் தொடர்ச்சியாக கூறப்பட்ட பொய்களில் ஒன்றாகும் என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த கருத்துக்கள் மாத்திரமல்ல. இந்தியாவின் வெளியுறவுச் செயலாளரும் நானும் இணைந்து திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமையும் இதுபோன்றதொரு பொய்யாகும் என்றும் அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த இரு தினங்களாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை தொடர்பில் தெளிவுபடுத்தும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், ஒரு விடயத்தை பல தடவைகள் மீண்டும் மீண்டும் கூறுவதன் மூலம் அது உண்மையாகும் என்ற பழைய நம்பிக்கையொன்று காணப்படுகிறது. இதன் காரணமாகவே கடந்த 4 மாதங்களாக எரிபொருள் தொழிற்சங்கள் அதே போன்று எதிர்க்கட்சி அரியல்வாதிகளும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அடிப்படையற்ற கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

எனினும் கடந்த 4 மாதங்களிலும் இவர்களால் கூறப்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமாயின் அது தொடர்பில் ஆரம்பத்திலேயே அறிவிப்பேன் என்று நான் இதற்கு முன்னரும் வாக்குறுதியளித்திருக்கின்றேன்.

எனினும் கடந்த செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி மசகு எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் , அதனை தவிர்ப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் நான் கூறினேன். அதற்கமைய மசகு எண்ணெய் தட்டுப்பாடு பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விநியோகத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் தெரிவித்திருந்தேன்.

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் கிடையாது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். அநாவசியமாக யாரும் கலவரமடையத் தேவையில்லை என்றார்.

No comments:

Post a Comment