விசேட பாராளுமன்ற அமர்வுகள் - நாளைய முழு நாளும் கேள்விகளுக்காக ஒதுக்கீடு : பாராளுமன்ற விசேட குழுக்களும் கூடவுள்ளன - News View

About Us

About Us

Breaking

Sunday, October 3, 2021

விசேட பாராளுமன்ற அமர்வுகள் - நாளைய முழு நாளும் கேள்விகளுக்காக ஒதுக்கீடு : பாராளுமன்ற விசேட குழுக்களும் கூடவுள்ளன

(ஆர்.யசி)

விசேட பாராளுமன்ற அமர்வுகள் நாளை திங்கட்கிழமை கூடவுள்ளதுடன், இவ்வார பாராளுமன்ற கூட்டத் தொடரில் 2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாளையதினம் வாய்மூல வினாக்களுக்கான விடைகளுக்கு மாத்திரம் இடமளிக்கப்படும்.

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் இதுவரை பாராளுமன்றத்தில் கேட்கப்படாத வாய் மூல விடைக்களுக்கான விசேட நாளாக நாளை திங்கட்கிழமை சபை அமர்வுகளை கூட்டுவதனால் நாளைய முழு நாளும் வாய் மூல கேள்விகளுக்கான விசேட பாராளுமன்ற அமர்வு தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

40 கேள்விகளுக்காக முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 வரையான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் முற்பகல் 10.00 மணிக்கு கூடவிருப்பதுடன், முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள், நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.

ஒக்டோபர் 06ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.

ஒக்டோபர் 07ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை தேருநர்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மற்றும் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

ஒக்டோபர் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை தொடர்பான சபை ஒத்தி வைப்பு விவாதம் இடம்பெறும்.

அத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய் மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்தி வைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் பிற்பகல் 4.50 மணி முதல் 5.30 மணி வரையான நேரம் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்தி வைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கும், புதன்கிழமை எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற குழுக்கள்
பாராளுமன்றத்தில் இரண்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களும் இரண்டு பாராளுமன்ற விசேட குழுக்களும் கூடவுள்ளன. அதற்கமைய, நாளை தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் எதிர்வரும் 06 ஆம் திகதி நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார்ஆலோசனைக் குழுவும் கூடவுள்ளன.

இதேவேளை, தற்போதுள்ள அமைச்சுகளின் கீழ் உள்வாங்கப்படாத அரச நிறுவனங்களால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு எதிர்வரும் 05 ஆம் திகதி கூடவுள்ளதுடன் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு எதிர்வரும் 07 மற்றும் 08 ஆகிய இரு தினங்களிலும் கூடவுள்ளது. மேலும் நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு எதிர்வரும் 05 ஆம் திகதி கூடவுள்ளது.

உரிய சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக, தேவையான அதிகாரிகளை ஒன்லைன் ஊடாகவும் இணைத்து கொண்டு அடுத்த வாரம் பல பாராளுமன்றக் குழுக்கள் கூடவுள்ளன.

No comments:

Post a Comment