துப்பாக்கிச் சூடு எச்சரிக்கை காரணமாக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
துப்பாக்கி சூட்டு எச்சரிக்கை நூற்றுக்கணக்கான மக்களை விமான நிலையத்தில் பீதியடையச் செய்து, வீதிகளில் ஓடச் செய்ததாக அதிகாரிகளையும் சாட்சிகளையும் மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது சந்தேகநபர் சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் உடனடி விவரங்கள் எதுவும் தெளிவாக வழங்கப்படவில்லை.
ஆனால் இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் வியாழன் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அந்த செய்திக்கு சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, விமான நிலையத்தின் தெற்குப் பகுதி விமானங்களுக்காக திறக்கப்பட்டதாகவும், வடக்குப் பகுதி மூடப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.
விமான நிலையத்தில் வேலிக்கு முன்னால் ஏராளமான மக்கள் வரிசையாக நிற்பதைக் காணொளிகள் வெளிக்காட்டுகிறது, அத்துடன் அந்த இடத்தில் பொலிஸ் அதிகாரிகளும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு சேவைகள் வாகனங்களும் அணி வகுத்துள்ளன.
No comments:
Post a Comment