பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து சுரங்க இரசாயனங்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் கப்பலொன்று விக்டோரிய கடற்பரப்பில் தீப்பிடித்துள்ளதாக கனேடிய கடலோர காவல்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை தீப்படித்த எம்.வி. ஜிம் கிங்ஸ்டன் என்ற கப்பலிலிருந்து 16 பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அதேநேரத்தில் தீயை அணைக்க ஐந்து பேர் கப்பலில் உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வான்கூவர் தீவின் தெற்கு கடற்கரையிலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் கப்பல் நங்கூரமிட்டுள்ளது. இதனால் தீவில் வசிப்பவர்களுக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் வான்கூவர் மற்றும் சியாட்டில் துறைமுகங்களுக்கு வணிகக் கப்பல்களின் போக்கு வரத்து தடையின்றி செயலில் உள்ளது.
கப்பலில் ஏற்பட்டுள்ள தீப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாவும், அது மேலும் பரவாது இருப்பதற்கு இழுவைப் படகுகள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுவதாக கனேடிய கடலோர காவல்படை கமாண்டர் ஜே.ஜே.பிரிக்கெட் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இப்பகுதியினூடாக போக்கு வரத்தில் ஈடுபடும் அனைத்து கப்பல்களையும் குறைந்தது இரண்டு கடல் மைல் தொலைவில் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோன்று ட்ரோன்கள் உட்பட அனைத்து விமானங்களையும் இரண்டு கடல் மைல்களுக்குள் அல்லது 2,000 அடிக்கு கீழே பறக்க விடாமல் போக்கு வரத்து அமைச்சகம் தடை செய்துள்ளது.
குறித்த கடல் பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணாக இந்த தீப் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment